கோவையில் குண்டுவெடிப்புதான்..முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டன-ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் குற்றச்சாட்டு
கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது என்பதை மறுத்து கோவையில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கோவை நவக்கரை பகுதியில் ஜெ.எஸ்.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டிட திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பங்கேற்றார். இந்நிகழ்வில் ஆளுநர் ரவி, கோவை சம்பவம் தொடர்பாக பேசியதாவது:

கோவையில் குண்டுவெடிப்புதான்..
சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிருந்தனர். ஆனால் அது நடக்காமல் போனது. அதில் ஒரு குண்டு மட்டும் வெடித்துள்ளது. ஆனால் அவர்களின் இடத்தில் இருந்து அதிக அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இது ஒரு மிகப்பெரிய சதி என்பதை உறுதி செய்கிறது.

பி.எப்.ஐ. தடை
சமீபத்தில் அபாயகரமான தீவிரவாத அமைப்பு பி.எப்.ஐ. தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இவை அனைத்தையும் நாம் மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். கோயம்புத்தூர் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் போன இடமாக மாறி வருகிறது.

கண்காணிப்பில் தவறிவிட்டோம்
தற்போது நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பில் இருந்துள்ளனர். தீவிரவாத செயல்களை கண்காணிப்பதில் நாம் தவறி விட்டோம். இங்கிருந்து ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பயிற்சி செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

ஆதாரங்கள் அழிப்பு
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை நாம் மிகவும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழக காவல்துறையை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாம் நான்கு நாட்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைக்கு கொடுத்துள்ளோம். இது போன்ற வாய்ப்புகளை தீவிரவாதிகளுக்கு வழங்கக்கூடாது. உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது கவலைக்குரியது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநர் குற்றச்சாட்டால் பரபரப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு 4 நாட்கள் தாமதம் ஏன் என கேட்டிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதைவிட உயர்மட்ட பயங்கரவாத சதித் திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என குற்றம் சாட்டியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என ஆணித்தரமாக எதனடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்? என்பது புரியவில்லை. ஒருவேளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு தாமதமாக கொடுத்ததால் ஆதாரங்கள் அழிக்க வாய்ப்பாகிவிட்டது என்பதைத்தான் ஆளுநர் அப்படி சொல்கிறாரா? என்பதும் தெரியவில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications