கேரளாவை அலற விடும் ‘எலி’.. தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரபர!
கோவை: கேரளாவில் கடந்த சில நாட்களாக எலி காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்தபுரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத்தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. திருச்சூரில் எலி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். அம்மாநில சுகாதாரத்துறை தகவலின்படி கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவலையடுத்து தமிழ்நாட்டிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கேரளாவையொட்டி உள்ள தமிழ்நாட்டு எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனைகட்டி, வால்பாறை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
மேலும் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சிகிச்சைகளை கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக,கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள தமிழக கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications