"வடிவேலு போல.. நானும் ரவுடிதான் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார் அண்ணாமலை!" வெளுக்கும் அமைச்சர் நாசர்
கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்தார்.
Recommended Video
கோவை பால் கம்பெனி பகுதியில் புரனமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேட்டி அளித்தார்.

அமைச்சர் நாசர்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், "முதல்வர் ஆணையை ஏற்றுத் தமிழகம் முழுவதும் ஆவின் பால் உற்பத்தியையும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 10 ஆண்டுக்காலம் மூழ்கிப்போன கப்பலாக இருந்த ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கிக் கப்பல் ஆக மாற்றி வருகிறோம். அதன் உற்பத்தியை அதிகரிக்கத் தமிழகம் முழுவதும் ஆவின் நிலையங்களைத் தொடங்கி வருகிறோம்

ஆவின் பணியிடங்கள்
கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆவின் பணியிடங்களைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முறைகேடாக வேலைவாய்ப்பு துறையின் விதிகளை மீறி ஆட்களை நிரப்பும் பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதுபோன்ற முறைகேடான பணி நியமனங்களை முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

ஆவின் சேர்மன்
ஆவின் சேர்மன் பொறுத்தவரை ஒட்டுமொத்த தீர்மானம் ஏற்றிக் கலைத்துவிட்டோம். அதனுடைய கோப்பு கவர்னர் கையெழுத்துக்காகக் காத்திருக்கிறது. கையெழுத்துப் போட்டவுடன் சேர்மன் தேர்தல் நடைபெறும் . கள்ளக்குறிச்சி திருப்பத்தூரில் புதிய பால்பண்ணை திறக்கப்பட உள்ளது. நாமக்கல்லில் பால்பண்ணையில் சேகரிக்கப்படும் பாலை பதப்படுத்தி விநியோகம் செய்ய உள்ளோம்" என்றார்.

லஞ்ச ஒழிப்பு துறை
மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இது விசாரணை நடத்தி வருகிறோம்.. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாகத் தகவல் வந்தால், அது ஆய்வு செய்து சீல் வைக்கப்படும். ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. இதன் காரணமாக மூன்று கடைகளின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

நோட்டாவை விட குறைவான வாக்கு
ஆவின் ஹெல்த் மிக்ஸ் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதாரமற்ற கருத்துக்கு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. எங்களுடைய தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் அவருக்குப் பதிலளிக்கலாம். அவர் நோட்டாவை விட கம்மியான ஓட்டுகள் வாங்கியவர். அண்ணாமலை தவறான கருத்தையும் தன்னிலை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பேசி வருகிறார்.

வடிவேலு போல
வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான் என ரேஞ்சில் அவர் பேசி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் விற்பனை இன்னும் தொடங்கவே இல்லை. அதற்கு முன்பே ரூ 27 கோடிக்கு வாங்கி விட்டார்கள் என அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் மேலும் அவருக்கு அதற்கான அரிச்சுவடி கூட தெரியாது. அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. மேலும் கடந்த 10 ஆண்டை காட்டிலும் ஆவினில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications