இலங்கை தாதா அங்கொடவுக்கு விஷம் கொடுத்து எரித்த காதலி உட்பட 3 பேர் கோவையில் கைது- சிக்கியது எப்படி?
கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் போலி ஆவணங்கள் மூலம் லொக்காவின் சடலத்தை கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்று எரித்ததாகவும் கள்ளக் காதலி உட்பட 3 பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் கொடிகட்டிப் பறந்தவர் அங்கொட லொக்கா. 2017-ல் எதிர்தரப்பான சமயங் கோஷ்டியில் 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கொட லொக்கா கோஷ்டி இந்தியாவுக்கு தப்பி வந்தது.
சென்னையில் தஞ்சமடைந்த இந்த நிழல் உலக தாதா கோஷ்டி போலீசாரிடம் சிக்கிய போதும் ஜாமீனில் வெளிவந்தது. பின்னர் அங்கொட லொக்கா பெங்களூருக்கு தப்பி ஓடி பதுங்கிய நிலையில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அங்கொட கொலை எப்படி?
அத்துடன் சினிமா காட்சிகளைப் போல பல்வேறு பரபரப்பு சம்பவங்களும் அங்கொட லொக்கா கொலையில் புதைந்து கிடந்தது தெரியவந்தது. அங்கொட லொக்காவால் கொல்லப்பட்ட பழைய கூட்டாளியின் மனைவி ஒருவர், கள்ளக்காதலியாக நடித்து விஷம் கொடுத்து அங்கொட லொக்காவை கொலை செய்தததாக முதலில் கூறப்பட்டது.

கோவையில் எரிக்கப்பட்டதா?
இதன்பின்னர் பெங்களூருவில் கொல்லப்பட்ட அங்கொட லொக்காவின் உடல் கொரோனா கால பாதுகாப்புகளையும் மீறி கோவைக்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியானது. இதனால் பெங்களூரு, சென்னை, கோவையில் அங்கொட லொக்கா கேங்கின் கூட்டாளிகள் குறித்து படுதீவிரமான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இலங்கை போலீசார் இன்னொரு பகீர் சந்தேகத்தையும் கிளப்பினர்.

அங்கொடவின் டிராமாவா?
நிழல் உலக குற்றச்செயல்களை தொடர்ந்து நடத்துவதற்காக தாம் கொலை செய்யப்பட்டுவிட்டதாக அங்கொட லொக்காவே நாடகமாடுவதாக சந்தேகிக்கிறோம் என்றது இலங்கை போலீஸ். இது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கோவை போலீசார் இவ்வழக்கில் அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொன்ற கள்ளக்காதலி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

சிக்கினார் சிவகாமசுந்தரி
அங்கொட லொக்கா தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதிப்சிங் என்பவரது சடலம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டது. கோவையில் மாரடைப்பால் பிரதிப்சிங் இறந்தார்; அவரது உடலை மதுரைக்கு செல்ல போலீசில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு கோவை போலீசாரும் அனுமதி கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் முதலில் சிவகாமசுந்தரி என்பவர் சிக்கினார்.

அங்கொட லொக்காவின் கள்ள காதலி
அவருடன் கோவையில் இருந்து மதுரைக்கு சென்றவர்கள் யார் யார்? என விசாரித்த போது இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண்ணின் பெயரும் அடிபட்டது. இந்த பெண் குறித்த விசாரணையில்தான் அத்தனையும் அம்பலமானது. இந்த அமானிதான், அங்கொட லொக்காவின் கள்ளக்காதலி என்றும் இவர்தான் பெங்களூருவில் அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர் என்பதும் தெரியவந்தது.

போலி ஆவணங்கள்- 3 பேர் கைது
இதனையடுத்து சிவகாமசுந்தரி, அமானி, ஈரோடு தியானேஸ்வரம் ஆகிய 3 பேரையும் கோவை போலீசார் கைது செய்தனர். அங்கொட லொக்காவின் பெயரை பிரதிப் சிங் என மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து அவரது சடலத்தை மதுரைக்கு கொண்டு சென்று மூவரும் எரித்ததும் தெரியவந்தது. தற்போது 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications