ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை! 100 நாட்கள் காத்திருப்போம்! தமிமுன் அன்சாரி அறிவிப்பு!
கோவை: ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் அரசு எடுக்கவுள்ள முடிவுக்காக 100 நாட்கள் காத்திருப்போம் என அறிவித்திருக்கிறார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
கோவையில் நேற்று நடைபெற்ற சிறை முற்றுகைப் போராட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டினால், அடுத்தகட்ட ஜனநாயக போராட்டத்தை முன்னெடுப்போம் எனக் கூறியிருக்கிறார்.

சிறை முற்றுகை
10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வலியுறுத்தி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. சனிக்கிழமை காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், 12 மணிக்கு தொடங்கியது. சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றதால், அதனை முடிவுக்கு கொண்டு வர போலீஸாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

கைது நடவடிக்கை
கூட்டம் அதிகம் இருந்ததால் கொரோனா பரவல் காரணமாக கைது நடவடிக்கையை முதலில் தவிர்த்த போலீஸார், பிறகு 100 பேரை மட்டுமாவது கைது செய்வது என்ற முடிவுடன் தங்கள் வேன்களில் ஏற்றத் தொடங்கினர். தமிமுன் அன்சாரி கைது என்ற தகவலை அறிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் மேடையை நோக்கி வரத் தொடங்கியதால் கைது நடவடிக்கையை தவிர்த்தது போலீஸ். தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக திருமுருகன் காந்தி, தனியரசு, கோவை ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிமுன் அன்சாரி
சிறை முற்றுகை போராட்டத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை விரைந்து அரசுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

100 நாள் காத்திருப்போம்
இதேபோல் தமிழக அரசு 161 -வது சட்ட பிரிவை பயன்படுத்தி இவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக 100 நாட்கள் காத்திருப்போம் எனவும் அறிவித்தார். ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தாமதமானால் அடுத்தகட்ட ஜனநாயக போராட்டத்தை முன்னெடுப்போம் எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications