என்னது.. ஆண்டாள் நெற்றியில் சிலுவையா.. ஷாக் ஆன ராஜேஷ்.. கிராபிக்ஸ் கிளப்பிய பீதி
யானை ஆண்டாள் நெற்றியில் திடீர் சிலுவையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: ஆண்டாள் நெற்றியில் சிலுவை வரைந்திருக்கும் சமாச்சாரம்தான் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.
இப்போது கொஞ்ச நாளாக தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் முகாம் நடந்து வருகிறது.
இந்த முகாமில் தமிழகம் முழுவதும் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளும் பங்கேற்றுள்ளது.
குளிப்பாட்டினர்
நேற்று முகாமின் 7-வது நாள். அப்போது காலையில் யானைகளை வரிசையாக அழைத்து சென்று அதன் பாகன்கள் குளிப்பாட்டினர்.
ஆண்டாள்
எப்போதும் குளிப்பாட்டி முடித்ததும், யானைகளின் நெற்றியில் அந்தந்த கோவில்களின் வழிகாட்டுதல் படி அடையாள சின்னங்களை சாக்பீஸ் கொண்டு வரைவது வழக்கம். அதன்படி ஆண்டாள் உட்பட 2 யானைகளை பாகன் ராஜேஷ் குளிக்க வைத்தார். பிறகு சம்பிரதாயப்படி அவற்றிற்கு அலங்காரம் செய்தார்.
நெற்றியில் சிலுவை
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த ஆண்டாள் யானையின் நெற்றியில் சிலுவை வரைந்திருப்பது போல் ஒரு போட்டோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் முகாமில் உள்ளவர்கள் உட்பட எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
கிராபிக்ஸ்
அப்போது, யாரோ ஒருவர் ஆண்டாள் யானையை குளிக்க வைத்து அழைத்து வரும்போது, போட்டோ எடுத்து, அதன் நெற்றியில் கிராபிக் செய்து, இந்த சிலுவையை வரைந்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து புத்துணர்வு முகாம் மற்றும் நல வாழ்வு முகாம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.