கோவையையும், என்னையும் பிரிக்க முடியாது.. தன் ஆர்மோனியத்தின் சீக்ரெட்டை பகிர்ந்த இளையராஜா
கோவை: கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு செய்த ஆர்மோனிய பெட்டியைத் தான் தற்போது வரை பயன்படுத்தி வருகிறேன். கோவையை என்னில் இருந்து பிரிக்கவே முடியாது என்று இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு இளையராஜா நேற்று வந்திருந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவுக்கு, ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது: நான் பேச்சாளர் கிடையாது, நான் பாட்டாளி. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுபவன் வேலை செய்பவன். என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு. என் பாடு பாட்டாகின்றது. எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக ஓடுவதைப் போல, ஒரு நோக்கத்திற்காக இங்கே அனைவரும் வந்து இருக்கின்றீர்கள்.
கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு நான் ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது. நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்ததுதான். என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார். இப்போது வரை அது என்னிடம் இருக்கின்றது. அதைப் பயனபடுத்தி வருகின்றேன் என தெரிவித்தார்.
கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என கூட சொல்ல முடியாது. கோவையை நான் பிரிவது கிடையாது என்று சொல்லலாம் என்று கூறி நெகிழ்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து விளம்பரதாரர்களும் இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications