அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து
கோவை: அரசு குடியிருப்பு வீட்டில் இருந்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியேறிய விவகாரத்தில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு, கடந்த 2007ம் ஆண்டு அரசு சார்பில், சென்னை தியாகராய நகர் சிஐடி நகரில் வீடு ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டை அரசு இலவசமாக தந்தாலும், நேற்று வரை வீட்டிற்கு வாடகை செலுத்தியே நல்லகண்ணு வசித்து வந்தார்.
ஆனால் அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட உள்ளதால், அங்குள்ளவர்கள் வெளியேறுமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை ஏற்றுகொண்டு, 12 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டைவிட்டு மற்றவர்களை போல நல்லகண்ணுவும் சத்தமில்லாமல் வெளியேறி, கே.கே.நகரில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

மாற்று வீடு
அப்போதும் தன்னை பற்றி கவலைப்படாத அவர், தாம் வசித்த அதே இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்திற்கு மாற்று வீடு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மாத வாடகைக்கு வீடு
இதற்கிடையே, மாற்று வீடு ஒதுக்கப்படாமல், உடனடியாக வெளியேற்றுவதா என்று திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்தநிலையில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு விளக்கம்
அரசு குடியிருப்பை நல்லகண்ணு ஒப்படைத்தது மற்றும் கக்கன் குடும்பத்தினர் இன்னும் ஒப்படைக்காதது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை சிஐடி காலனி அரசு குடியிருப்பில் உள்ள 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2011ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நோட்டீஸ்
இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வீட்டு வசதித்துறை மேம்பாட்டிற்காக அனைவருக்கும் நோட்டீஸ் கொடுத்தது போல், நல்லகண்ணுவிற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அரசியல் செய்ய ஒன்றும் இல்லை
மேலும், நல்லகண்ணுவிற்கு மாற்று வீடு தரப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதால், அதில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications