“வடிவேலு வந்தா கூட கூட்டம் கூடும்.. கூட்டத்தை வைத்து தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது”: திருமாவளவன்
கோவை: "நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்குச் சென்றால் கூட்டம் கூடும். கூட்டம் கூடுவதை வைத்து தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். "திமுக கூட்டணி வெற்றியில் தவெக எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "பிரச்சாரம் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். இப்போதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகின்றன. விஜய்யின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.

தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால், அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவத்தைப் பெறவில்லை. விஜய் தனியாகச் செல்வார் என்றுதான் கூறுகிறார்கள். தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது. ஆனால் அது இன்னும் வடிவம் பெறவில்லை.
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தைச் சந்திக்கப் போகிறார்கள். அணியாக சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. திமுக கூட்டணி கட்சிகள் இடம் மாறுவதற்கு எந்தத் தேவையும் இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களிலும் ஏராளமான மக்கள் திரள்கின்றனர். மக்கள் திரள்வதை வைத்து எதுவும் கூறமுடியாது. நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தினால் கூட லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். கூட்டத்தை வைத்து தேர்தல் முடிவாக இருக்கும் எனக் கருத முடியாது." என்று தெரிவித்தார்.
மேலும், "கூட்டத்தை வைத்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது எல்லாருக்கும் பொருந்தும். அண்மையில் விசிக மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தால் ஆட்சி மாற்றத்தை விசிக ஏற்படுத்துமா? என விவாதம் நடக்கவில்லை. திருமாவளவன் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? மாற்றத்தை ஏற்படுத்துவாரா என விவாதிக்கவில்லை. விஜய் ஒரு நடிகர் என்பதை வைத்துகொண்டு பெரிய மாற்றம் நிகழப்போவது போன்று தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற மாயதோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர். திமுக தனித்து ஆட்சியை நடத்தவில்லை. கூட்டணி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அந்த கூட்டணி வலுவாக, கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. எனவே, மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
திமுக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு வரக்கூடிய லட்சக்கணக்கானோர் கொள்கை கோட்பாடுடன் இருப்பவர்கள். நீண்டகாலமாக அரசியலில் மக்களுடன் நிற்பவர்கள். அந்த பெரும் திரளுக்கும், விஜய்க்கு திரண்டு வந்துள்ள கூட்டத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த மக்கள் திரளை மட்டுமே ஒரு பொருட்டாக எடுத்துகொண்டு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த போகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றனர். திமுக குறித்து மட்டுமே விஜய் பேசி வருவது திட்டமிட்ட அஜெண்டவிற்காக களம் இறங்கியுள்ளார் என்ற தோற்றத்தை உருவாகிறது. விஜய் திட்டமிட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications