எடப்பாடி பழனிசாமியை மிரட்டும் பாஜக.. கோவையில் கொதித்த திமுக மா.செ.
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டுகிறது என்றும், பாஜகவுடன் கைகோர்க்க தான் எடப்பாடி டெல்லி சென்றதாகவும் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தொண்டாமுத்தூர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறைக்கான பணத்தை தான் பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணிய நிலையில், அவர்கள் ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்கு மோடியுடன் கைகோர்க்க சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவினர் கூட்டணியில் சேராவிட்டால் ரெய்டு நடத்துவோம், எனவே கூட்டணி சேர்ந்து கொள்ளுங்கள் என்று பாஜக சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் 2026 இல் மீண்டும் முதலமைச்சரானால் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித்தொகை 2,500 ரூபாயாக உயரும். மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை மோடி அரசு வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் சம்பாதித்து தருவார் என்றார்.












Click it and Unblock the Notifications