ஓடும் பஸ்ஸில் தான் சுமதிக்கு பிடிக்குமாம்.. பின்னாடியே வரும் செல்வம்.. கோவையில் சிக்கியது எப்படி?
கோவை: பார்க்க அப்பாவி போல் இருக்கும் இந்த தம்பதி தான் கோவை, திருப்பூர் பகுதிகளில் ஓடும் பஸ்சில் திருடுபவர்கள் ஆவார். இவர்கள் திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இவர்களின் திருட்டு வேலைகளை போலீசார் தற்போத அம்பலப்படுத்தி உள்ளனர்.
ஏறுபவர்கள் திருடர்களா இல்லையா என்ப பேருந்தில் ஏறும் போதே, நடத்துனர்களுக்கு தெரிந்துவிடும். இதை குறிப்பால் உணர்த்தும் வகையில் வடிவேலு ஒரு பாட்டும் பாடுவார். உஷாராய்யா உஷாரு, ஓரஞ்சாரம் உஷாரு, நகை நட்டு உஷாரு, பணம் காசு உஷாரு என்று பாடுவார்.. ஆனால் கடைசியில் அவர்களிடமே திருடன் கைவரிசை காட்டி செல்வார்.

நகைக்சுவைக்காக படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டாலும் அது நிஜத்தில் உண்மை. அதுபோல் பேருந்துகளில் கைவரிசை காட்டும் திருடர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும், ஸ்டேசன்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு தம்பதி ஓடும் பஸ்ஸில் கோவையில் கைவரிசை காட்டி வந்தது.
இந்நிலையில் கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்படி ஓடும் பஸ்சில் கைவரிசை காட்டும் நபர்களை கைது செய்ய துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா ஆகியோர் தலைமையில் போலீசார் கார்த்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
கோவை டவுன்ஹால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தார்கள். அதில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காங்கயம்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 35), அவருடைய மனைவி சுமதி (34) என்பதும், அவர்கள் ஓடும் பஸ்சில் கோவையை சேர்ந்த 3 பெண்களிடம் திருடியாத உறுதியானது. இதையடுத்து செல்வகுமார், சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ.11 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பலவேறு தகவல்கள் வெளியானது. இதன்படி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காங்கயம்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 35), அவருடைய மனைவி சுமதி (34) ஆகிய இருவருமே ஓடும் பேருந்துகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார்கள். இதில் செல்வகுமார் மீது நெடுஞ்சாலையில் செல்பவர்களை தாக்கி பணம், நகை கொள்ளையடித்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
செல்வகுமார், தனது மனைவி சுமதியுடன் சேர்ந்து ஓடும் பஸ்சில் அடிக்கடி கைவரிசை காட்டி உள்ளார. இதில், சுமதி பயணி போன்று செல்லும் பஸ்சின் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்வகுமார் செல்வார்களாம், பயணிகளிடம் நகை, பணத்தை அபேஸ் செய்துவிட்டு சுமதி பஸ்சில் இருந்து இறங்கி தனது கணவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்வாராம்.
மேலும் அவர்கள் திருடிய நகையை விற்று பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். திருடிய பணத்தில் வீட்டிற்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், வாசிங்மிஷின் உள்ளிட்ட பொருட்களும் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் 2 பேர் மீது கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications