1998 ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் "பதற்ற களமாக்கப்படும்" கோவை! இரும்பு கரத்தால் ஒடுக்குமா காவல்துறை?
கோவை: 1998-ம் ஆண்டுக்குப் பின்னர் கோவை இப்போது மீண்டும் பதற்ற பூமியாக உருமாற்றப்பட்டுக் கொண்டுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று இரவு முதல் அரங்கேறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணியை முளையிலேயே கண்டறிந்து இரும்புக்கரத்தால் ஒடுக்குவதன் மூலமே இன்னொரு கறுப்பு அத்தியாயத்தில் இருந்து அந்த நகரத்தை மீட்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுகள், இருவேறு ரவுடி குழுக்களிடையேயான மோதல்களில் வீசப்பட்டது உண்டு. அதற்கு இணையானது பெட்ரோல் குண்டு வீச்சுகளுக்கும் பாஜகவுக்குமான தொடர்புடைய செய்திகள்.

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்
தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள், பாஜக ஆதரவு வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், வாகனங்கள் ஆகியவைதான் மிக அதிகமான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை எதிர்கொண்டிருக்கின்றன. இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பெரும்பாலானவை அற்பமானவை, உள்நோக்கம் கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. தமக்கு கட்சியில் முக்கியத்துவம் வேண்டும் என்பதற்காக, தமக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதற்காகவே வலதுசாரி கட்சிகள், நிர்வாகிகள் தாங்களே ஏற்பாடு செய்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அம்பலப்பட்டும் இருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் குறிப்பாக கோவை பகுதியில் மட்டும் நேற்று இரவு முதல் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதையும் காண முடிகிறது.

ஆ.ராசா பேச்சும் எதிர்வினைகளும்
மனுஸ்மிருதி அல்லது மனுதர்மத்தில் இந்துக்களில் சூத்திரர் யார் என்பது குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பதை சுட்டிக்காட்டி திமுக மூத்த தலைவர் ஆ.ராசா பேசினார். ஆ.ராசா திடீரெனவும் பேசவில்லை. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே பேசப்பட்டு வருகிற கருத்தையே ஆ.ராசா சுட்டிக்காட்டினார். ஆனால் ஆ.ராசா, தமிழ்ப் பெண்களை மட்டும் குறிவைத்து அப்படிப் பேசிவிட்டார்; இந்துப் பெண்களை வேண்டும் என்றே அப்படிப் பேசினார் என்றெல்லாம் கதைகட்டி அளந்துவிட்டு திசைமாற்றி திருப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது வலதுசாரி கூட்டம். இதை அப்படியே உண்மை என நம்பி, ஆ.ராசா நாக்கை அறுப்போம் என வன்முறை வெறிப்பேச்சு தொடங்கி நாலாந்தர பேச்சுகளை பொது இடங்களில் பேசுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதுமான போக்கு திடீரென தூண்டிவிடப்பட்டிருக்கிறது. இப்படியான வன்முறைகள், போராட்டங்களை இந்த நிமிடம் வரை அரசும் போலீசும்தான் கையாண்டு வருகிறது. வலதுசாரிகளுக்கு பதிலடியாக அவர்களை விட வலிமையான இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல கடந்துதான் செல்கின்றன.

இரும்புக்கரத்தால் ஒடுக்குக
ஆனாலும் திடீரென வலதுசாரிகளின் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய வன்முறைப் போக்கை வலதுசாரிகளோ, இடதுசாரிகளோ யார் கையில் எடுத்தாலும் இரும்புக்கரத்தால் ஒடுக்கத்தான் வேண்டும். அதை முளையிலேயே கிள்ளி எறிந்து, கர்த்தாக்களை கையும் களவுமாக பிடித்து தண்டித்துதான் ஆக வேண்டும் என்பதில் இருவேறு கருத்து யாருக்குமே இருக்கவும் கூடாது. அதுவும் கோவை மண்ணில் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையை எதன் பெயராலும் அரங்கேற்றுவதற்கு ஒருதுளியுமான அனுமதியை தந்துவிடவே கூடாது இந்த திராவிட மாடல் அரசு!

அந்த கறுப்பு அத்தியாயம் 1998 குண்டு வெடிப்புகள்
ஏனெனில் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் என்கிற பெருந்துயரத்தை அனுபவித்த படிப்பினைகள் நம்மிடம் இருக்கிறது. 1997-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி செல்வராஜ் என்ற போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இந்த அசாதாரண சூழ்நிலை உருவானது. இதன் உச்சமாகத்தான் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நாட்டையே அதிர வைத்த கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. இக்கோர வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையில்தான் இருக்கின்றனர்.

அமைதி திரும்ப வேண்டும்
அப்படியான கறுப்பு அத்தியாத்தை கொண்டது கோவை. இந்த மண்ணில் வலதுசாரிகள் தங்களுக்கு தாங்களே ஒரு வெளம்பரத்துக்கு என பெட்ரோல் குண்டுகளை வீசினாலும், இடதுசாரிகள் என்பவர்கள் கொள்கை ரீதியாக பதிலடி தருகிறோம் என வன்முறையை கையில் எடுத்தாலோ அல்லது மதரீதியான போலீஸ் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை என மத அடிப்படைவாதிகள் மதம்பிடித்து அசம்பாவிதங்களை நிகழ்த்தினாலோ தமிழக காவல்துறை, திராவிட மாடல் என பெருமை பேசுகிற திமுக அரசின் காவல்துறை எதன் பொருட்டும் எவர் பொருட்டும் தலைவணங்காமல் சட்டத்தின் கடமையை செவ்வனே நிறைவேற்றி அந்த மண்ணில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பணி என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications