கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை.. இழப்பீடு பெற இன்று முக்கியமான நாள்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு (சாலை விரிவாக்கத்துக்கு) நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு பெற சிறப்பு முகாம் கிணத்துக்கடவில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த முகாமில் இழப்பீடு தொகையை பெறலாம் என கோவை கலெக்டர் அறிவித்துள்ளார்
மிகப்பெரிய வாகன நெருக்கம் இருந்து வந்த கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை காரணமாக பயணம் எளிதாகி உள்ளது. பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகன ஓட்டிகள் விரைவாக சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை- பொள்ளாச்சி சாலையை விரிவாக்கம் செய்து 4 வழிச்சாலையாக மாற்றும் போது குறிச்சி கிராமம் முதல் பொள்ளாச்சி அருகே ஆச்சிப் பட்டி கிராமம் வரை 4 கட்டமாக நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதில் நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிலம் கொடுத்தவர்களில் இன்னமும் சிலர் இழப்பீடு பெறாமல் உள்ளார்கள். அவர்கள் இன்றும் நாளையும் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கோவை- பொள்ளாச்சி சாலையை அகலப்படுத்தும் போது ஏராளமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டும், சில நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகை பெற தேவைப்படும் ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்க வில்லை.
மேலும் அவர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் ஆஜராகவும் இல்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. எனவே நிலம் கொடுத்தவர்களின் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி, தனி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். எனவே இந்த சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்தவர்கள், அதற்கான ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்தால் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த வாய்ப்பை நில உரிமையாளர்கள் பயன்படுத்தி இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications