பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- கோவையில் கறுப்புக் கொடி- தாராபுரத்தில் கறுப்பு பலூன்கள்!
கோவை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்பு கொடி காட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தாராபுரத்தில் கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம், கேரளா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கோவை வருகை தந்தார். அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று கோவை பீளமேடு பகுதியில் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.