நடிகை திரிஷா பாதுகாப்பாகத்தானே இருக்கிறார்! திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு
கோவை: "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் சொல்கிறாரே. ஆனால் த்ரிஷா பாதுகாப்பாகத்தானே இருக்கிறார்" என கோவை நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையாக பேசியிருக்கிறார்.
கோவையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

ஒரு நாள் சிறைக்குள்ளே வைத்தாலே கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வரும் இந்த காலத்தில் 472 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு கோவையை மீட்க வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகையாக எங்கள் அம்மாக்களுக்கு மட்டும் மாதம் ரூ 1000 கொடுக்கிறீர்களே, ஸ்டாலின் தாத்தா, நாங்கள் மேல் படிப்பு படிக்க பணம் வேண்டும் என்று பெண் குழந்தைகள் கேட்டனர். அதனால் அவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் கொடுத்தார் முதல்வர்.
மாணவர்கள் கோரிக்கை
இதைப் பார்த்துவிட்டு மாணவர்கள் எல்லாம் எங்களுக்கும் படிக்க உதவி செய்யுங்கள் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனால் அவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ 1000 வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்
குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், தோழி விடுதிகள் என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார்.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் வீட்டில் இருக்குமாறு உலகமே சொன்னது. "தனியாக இருங்கள், இல்லாவிட்டால் கொரோனா வந்துவிடும்" என்று உலக தலைவர்களும் சொன்னார்கள்.
"ஒன்றிணைவோம் வா"
ஆனால், "ஒன்றிணைவோம் வா" என்று சொன்ன ஒரே தலைவர் ஸ்டாலின் தான். சொல்லிவிட்டு சும்மா இருக்கவில்லை. ஒரு செல்போன் எண் கொடுத்தார். அரிசி, பருப்பு எல்லாம் வந்துதா இல்லையா?
அத்தியாவசிய பொருட்கள்
வீடு தேடி அத்தியாவசிய பொருட்கள் வந்தன. இந்த பணிகளை செய்து வந்ததன் காரணமாக சென்னையில் எம்எல்ஏவாக இருந்த அன்பழகன் கொரோனா வந்து இறந்தே போனார். எங்கள் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றினோம். அன்று முதல்வராக இருந்த பழனிசாமியிடம் மக்களுக்காக 5000 ரூபாய் கொடு என்றார். ஆனால் வெறும் 1000 ரூபாய் தான் கொடுத்தார்.
கவுன்சிலரா எம்எல்ஏவா
இந்த கட்சியில் நான் கவுன்சிலர் ஆகப்போறேனா? எம்எல்ஏ ஆகப்போகிறேனா? ஒன்றும் கிடையாது. இந்தாலும் கருணாநிதி தொடங்கிய கட்சி என்பதால் தான் இருக்கிறேன்.
பெண்கள் முன்னேற்றம்
பெண்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று நம்புகிறோம். இந்தியாவில் 100 பெண்கள் வேலைக்குப் போனால் அதில் 45 பேர் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பெண்கள்தான்.
திரிஷா பாதுகாப்பாதானே இருக்காரு
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் விஜய். நான் விஜய்யை கேட்கிறேன், த்ரிஷாவை நாங்கள் ஏதாவது செய்துவிட்டோமா? பாதுகாப்பாதானே இருக்கிறார். ஆனால் உங்க அளவுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது.
செயல்வீரர்கள் கூட்டம்
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசிய போது "ஆட்சிக்கு வந்தால் நான் லஞ்சம் வாங்க மாட்டேன், ஒரு பைசா கூட தொட மாட்டேன்" என்றார். ரூ1.15 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றினீர்களே. 2 நாட்கள் டெல்லியில் வைத்து விசாரித்தார்களே, அங்கு பேச வேண்டியது தானே விஜய்!
மழை புயல்
மழை, புயல், கொரோனா காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார். கரூரில் கூட்ட நெரிசலில் இவரை பார்க்க வந்து 41 பேர் இறந்தபோதும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அந்த இடத்தை விட்டு விஜய் சென்னைக்கு ஓடினாரே. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்துவிட போகிறார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சை பேச்சாளர்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கெனவே குஷ்பு உள்ளிட்ட நடிகைகளை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications