அதென்ன மஞ்சள் மஞ்சளா!.. காங்கிரஸ் அலுவலகத்தில் மனித மலம்.. அதிர்ந்த கோவை.. இருவர் கைது
கோயம்புத்தூர்: கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மனித மலம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மனித கழிவு தொடர்பான பிரச்னைகள் அதிகம் மேலெழுந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தின் மனசாட்சியையே உலுக்கி இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னரே, பள்ளிகளில் மனித கழிவுகள் வீச்சு சம்பவங்கள் அரங்கேறின.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசு பள்ளியின் பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், இது மனித மலம் இல்லை என்றும், காகம் அழுகிய முட்டையை கொண்டு வந்து போட்டிருப்பதாகவும் ஆட்சியர் விளக்கமளித்தார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மனித கழிவு வீசப்பட்டிருக்கிறது. கோவை இருகூர் சுங்கம் மைதானத்தில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில் மனிதக் கழிவு தண்ணீரில் கலந்து வீசப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல அதிமுக கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் இல்லத்திலும் மனிதக் கழிவை வீசியதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிங்காநல்லூர் பகுதியில் கழிவறையை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் என இருவரை கைது செய்திருக்கின்றனர்.
மனித கழிவுகளால் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கே இழுக்கானது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மனித மலம் வீசபட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications