எனக்கு அமைச்சராகும் ஆசையில்லை.. கோவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
கோவை: கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை; சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் தனக்கு அமைச்சராகும் ஆசை இல்லை என்றும் கூறினார்.
கோவையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் எத்தனையோ முறை நான் கோவைக்கு வந்திருந்தாலும், இத்தனை எழுச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை.
கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயமுத்தூருக்கு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை.

கோவை
தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சரி பார்க்கலாம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்போடு திமுக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம்
செந்தில் பாலாஜி எந்த ஒரு செயலையும் எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியையும் சொன்னதை போல் வெற்றியை கொடுத்தவர். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

கோவையில் கொரோனா
கொரோனா தாக்குதல், அதிலும் கோவையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கொரோனாவுடன் போராடினோம். 3ஆவது அலை வரும் என்கிறார்கள். எனினும் தமிழகத்தை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேர்தல் வாக்குறுதிகள்
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிலும் துணை முதல்வர் வரை என்னை கொண்டு போய்விட்டார்கள். தினமும் பத்திரிகைகளில் இதுகுறித்துதான் எழுதி வருகிறார்கள்.

எந்த பதவியும் வேண்டாம்
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மீண்டும் சொல்கிறேன், கோவை மக்கள் திமுகவை ஏமாற்றி விடாதீர்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சரவையிலுள்ள பலரும் கூட அவ்வப்போது பொது வெளியில் கருத்து கூறி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications