கட்சி யார் வேணும்னாலும் ஆரம்பிக்கலாம்.. மக்கள் யார் பக்கம்ங்குறது தான் முக்கியம்.. வானதி பளிச்!
கோவை: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வானதி சீனிவாசன்.
அரசியலுக்கு வருவதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்த பல மாதங்களாகவே நடிகர் விஜய் மேற்கொண்டு வருகிறார். விரைவில், டெல்லி சென்று, அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் விஜய்யின் அரசியல் பிரவேசம் நடக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே, விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் பணையூரில், விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் நடத்தும் மாபெரும் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசனிடம், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம். மக்களுக்கு எப்படி பணி செய்கிறார் என்பதை பார்ப்போம். அதன் பிறகு எங்களது கருத்துக்களை சொல்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய வானதி சீனிவாசன், கடந்த ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. கேலோ இந்தியா ஒரு தேசிய அளவிலான நிகழ்வு. இதற்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பெருமளவு நிதி உதவி செய்துள்ளது. பிரதமர் தான் இதை துவக்கி வைத்திருக்கிறார். இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் கோவை, திருச்சி மதுரை போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
கோவையில் இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிலுமே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. ஆனால், சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களில் மாநில முதல்வர் புகைப்படத்தை மத்திய அரசு வைத்துள்ளது. இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பாக கூட செஸ் ஒலிம்பியாட் நடந்தபோதும் இது போன்று செய்தார்கள்.
தாத்தா, தந்தை, மகன் என மூன்று பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கட்சியே குடும்ப கட்சி, அரசாங்கத்தையும் குடும்ப அரசாக எண்ணுகிறதா? மேலும் இந்த அரசு விளம்பர அரசாங்கம். பிரதமரின் புகைப்படத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் எப்படி மத்திய அரசாங்கத்தின் அனுமதியோடு ஒத்துழைப்போடு நடத்துகின்றனர்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications