"எல்லாம் மத்திய அரசு நிதிதான்! பெயரை மட்டும் திமுக அரசு வைக்குது.." வானதி சீனிவாசன் விமர்சனம்
கோவை: பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Recommended Video
பாஜக சார்பில் கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட காரச்சேரி கிராமத்தில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்தும் பாஜகவில் புதிதாகவும் சுமார் 500 பேர் இணைந்தனர்.

வானதி சீனிவாசன்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்கவே அதிமுக ஆட்சியில் அம்மா இருசக்கர வாகன திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடிந்தது. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்தனர்.

இலவச பேருந்து
இப்போது பெண்கள் எங்குச் செல்ல வேண்டும் என்றாலும் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் கூட அனைத்து பேருந்துகளிலும் பெண்களால் இலவசமாகப் பயணிக்க முடியாது. சாதாரண பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும். இந்தத் திட்டத்தில் இப்போது பெண்களுக்கு பிங்க் கலர் பேருந்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், பேருந்தின் முகப்பில் மட்டும் உதட்டுச் சாயம் போல் பிங்க் கலர் பூசி உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது.

மத்திய அரசுத் திட்டங்கள்
மத்திய அரசுத் திட்டங்கள் பெண்களுக்கு உதவும் வகையில் நல்ல பேருந்துகளை வழங்காமல் பழைய பேருந்துகளுக்கு பெயின்ட் பூசித் தொடங்கி உள்ளார்கள். அதேபோல மற்றொன்றை நாம் மறந்துவிடக்க கூடாது. தமிழ்நாட்டில் இப்போது செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் நிதியில் இருந்து தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அந்தத் திட்டத்திற்குப் பெயரை வைக்கும் வேலையை மட்டும் மாநில அரசு செய்து வருகிறது.

கள்ள ஓட்டுகள்
தேர்தல் சமயத்தில் ஒரே நபர் மூன்று நான்கு இடங்களில் கள்ள வாக்குகளைப் போடுவார்கள். இப்படி கள்ள ஓட்டுக்கள் போடுவதைத் தடுக்கவே தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணையும் வாக்காளர் அடையாள எண்ணையும் இணைக்கும் சீர்திருத்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படும். மேலும், ஒருவர் குறித்து முழுமையான விவரங்கள் அறிந்து கொள்வதன் மூலம் அரசின் அனைத்து துறைகளிலும் பயனடையும்.

ஜனநாயகம்
இது ஜனநாயகத்திற்கு முக்கியமான விஷயம், இதை கட்சி வேறுபாடுகள் கடந்த அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை திமுக எதிர்க்கிறார்கள். இது அவர்கள் கள்ள ஓட்டுக்கள் போட மக்களை ஊக்குவிக்கின்றார்கள் என்றே அர்த்தம்! வங்கிக் கணக்கில் தொடங்கி எல்லா இடங்களிலும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனாலும், திமுக இதைத் தொடர்ந்து எதிர்த்து வருவது ஏன்" என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications