குஷ்பு தமிழ் பேசுறதே பெருசு.. அர்த்தம் புரியாமல் சொல்லி இருப்பார்.. வக்காலத்து வாங்கிய வானதி!
கோவை: குஷ்பு தமிழ் பேசுவதே பெரிது, அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார் என குஷ்பு மகளிர் உரிமைத்தொகையை பிச்சை எனக் கூறியது பற்றி பதில் அளித்துள்ளார், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
சென்னை செங்குன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார் குஷ்பு.

பெண்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் தமிழ்நாஅடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிச்சை என விமர்சித்து பேசிய குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவினர் நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் குஷ்பு பேச்சைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
எனினும் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் குஷ்பு. தனது பேச்சை வைத்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறியும், திமுகவை விமர்சித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
இந்நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பூ பிச்சை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
வானதி சீனிவாசன் கூறுகையில், "குஷ்பு இவ்வளவு தூரம் தமிழ் பேசுவதே பெரிய விஷயம். குஷ்புவின் தாய்மொழி வேறு. வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால், வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார். அதனால், அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications