கோவையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்.. கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு.. நீடிக்கும் பதற்றம்
Recommended Video

கோவை:கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வெட்டி சாய்த்ததுடன், கட்சி கொடியை தீ வைத்தும் எரித்தனர். அதையறிந்த ஏராளமான சிபிஎம் கட்சியினர் சிங்கா நல்லூர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த, கேரளாவை கண்டித்து இந்து அமைப்பினர் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம், சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம், அதன் அருகே இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழக அறிவிப்பு பெயர் பலகை, காமராஜர் சாலையில் இருந்த கொடி கம்பம் ஆகியவற்றை கீழே வெட்டி சாய்த்து, அதிலிருந்த கட்சி கொடியை எடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எரித்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்ததை அறிந்த அப்பகுதி சிபிஎம் கட்சியினர், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சவுமி நாராயணன், பரத் என்ற இருவரை பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது. மேலும், சபரிமலை விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொடி கம்பத்தை சாய்த்து கட்சி கொடியை தீ வைத்ததும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரான சரத் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஏராளமான சிபிஎம் கட்சியினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications