கோவையில் அண்ணாமலை பிரச்சாரத்தில் அப்படி என்ன தான் நடந்தது.. பரபர குற்றச்சாட்டு
கோவை: அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுகவினர் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாக முன்னாள் திமுக MLA நா.கார்த்திக் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில் சிங்க ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

அதேபோல பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கே கடும் போட்டி நிலவி வருகிறது.
அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றிரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், மொத்த சொத்தையும் திமுக எடுத்து வந்தாலும் கோவை மக்கள் நேர்மையின் பக்கமே இருப்பார்கள் என்றார். மேலும், கோவையில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவாரம்பாளையம் 28ஆவது வார்டிற்கு சென்ற அண்ணாமலை அங்கேயும் பிரச்சாரம் செய்தார். இருப்பினும், அங்கு அண்ணாமலை பிரச்சாரம் செய்யும் போது இரவு 10.40 ஆனதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் படி இரவு 10 மணிக்கு மேல் ஒருவர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், அண்ணாமலை 10.40க்கு போய் பிரச்சாரம் செய்தது சர்ச்சையானது.
தாக்குதல்: அண்ணாமலை வந்த போது அங்கே இருந்த சிலர் திமுகவினர், பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணாமலை சென்ற பிறகு திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் திமுக எம்எல்ஏ: இதற்கிடையே நேற்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் திமுக MLA நா.கார்த்திக் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவினர் எப்படி மதவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார்களோ.. அதேபோல தேர்தல் சட்ட விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் போதே இந்திய அரசியலைப்பிற்கு உட்பட வேட்பாளராக இருப்பேன் என்று தான் உறுதிமொழி ஏற்கிறார்கள். ஆனால், பாஜக வேட்பாளர் பாசிசத்தைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
என்ன நடந்தது: இரவு 10.45 வரை கோவை சிங்காநல்லூர் ஆவாரம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் நிற்கும் போதே சட்டத்தைப் புறந்தள்ளி இப்படி அடாவடியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அரசியல் சட்டத்தை மீறி நான் தான் என்ற ஆதிக்க வெறியுடன் செயல்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் பல முறை இப்படித் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பேசியிருக்கிறார்.
இன்றும் அதேபோல இரவு 10.40 வரை பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது எங்கள் கட்சி தொண்டர்கள் அங்கே இருந்துள்ளனர். ஏன் இப்படி விதிகளை மீறி பிரச்சாரம் செய்கிறீர்கள்.. இது ரொம்ப தப்பு என எங்கள் தொண்டர்களும் கூட்டணி தொண்டர்களும் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீது அத்துமீறி கை வைத்துள்ளார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை: கோவையில் தேர்தலில் போட்டியிடும் போதே இப்படிச் செய்துள்ளார்கள். இங்கு இதுவரை ஏகப்பட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. இதுவரை எந்தவொரு தேர்தலிலும் இப்படி விதிகளை மீறி எந்தவொரு வேட்பாளரும் பிரச்சாரம் செய்ததே இல்லை. ஆனால், பாஜக வேட்பாளர் அண்ணாமலை பாசிசம், மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார். அவரது அதிகார திமிரைக் காட்டியுள்ளார்.
இது குறித்து போலீசாரும், இந்தியத் தேர்தல் ஆணையமும் உரிய விசாரணை நடத்தித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications