நெல்லை மேயரை அறிவிச்சாச்சு... கோவை மேயர் யார்.. பின்னணி தகவல்
கோவை: நெல்லை, கோவை மேயர்கள் பதவிகள் காலியாகியுள்ளன. நெல்லை மேயர் பதவிக்கு நாளையும், கோவை மேயர் பதவிக்கு நாளை மறுநாளும் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் நெல்லை மேயர் பதவிக்கு கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோவை மேயர் பதவிக்கு யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கோவை மேயராக இருந்த கல்பனா, நெல்லை மேயராக இருந்த சரவணன் ஆகியோர் மீது திமுகவினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு புகார்களை முன்வைத்தனர். அடுத்தடுத்த பிரச்னைகளால் அவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாகியுள்ள மேயர் பதவிக்கு திமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துகள் நிலவியுள்ள மாநகராட்சிகள் என்பதால், அசம்பாவிதமின்றி தேர்தல் நடத்தும் பொறுப்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வசம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி (நாளை) மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்நிலையில் துறை அமைச்சர் நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று, அந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பஞ்சாயத்து அதிகம் நிலவும் மாநகராட்சி என்பதால் சீனியரான ராமகிருஷ்ணனை டிக் அடித்துள்ளனர். மறைமுக தேர்தலில், மாநகராட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளனர்.
அதேபோல கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி (நாளை மறுநாள்) மறைமுக தேர்தல் நடக்கவுள்ளது. கோவை மேயர் பதவி மகளிர் ஒதுக்கீடு என்பதால், கிட்டத்தட்ட மாநகராட்சியில் உள்ள அனைத்து பெண் கவுன்சிலர்களுமே அந்தப் பதவியை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மண்டலத் தலைவர்கள் தெய்வானை, லக்குமி இளஞ்செல்வி, மீனா மற்றும் கவுன்சிலர்கள் சாந்திமுருகன், அபிராமி, சுபஶ்ரீ என்று ஏராளமானோர் முட்டி மோதி கொண்டிருக்கின்றனர். சீனியர் அமைச்சர்கள், அறிவாலய புள்ளிகள் என்று அனைத்து பவர்சென்டர்கள் மூலமாகவும் முயற்சி செய்து வருகின்றனர்.
உளவுத்துறை மற்றும் சபரீசனின் பென் டீம் மூலமாகவும் ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் கோவை இரண்டு மாநகராட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, நாளை நெல்லை மேயர் தேர்தலை வெற்றிகரமாக முடித்துவிட்டு அமைச்சர் நேரு நாளை மதியம் கோவை வருவார். அதன்பிறகு கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி, அதில் மேயர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் தெய்வானை, சாந்திமுருகன் மற்றும் சுபஶ்ரீ ஆகியோரில் ஒருவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications