பார்த்தீங்களா! உங்களுக்கும் இதே ஜாக்பாட்தான்! அறிவாலயம் அனுப்பிய "அதிரடி செய்தி".. ஆடிப்போன அதிமுக
கோயம்புத்தூர்: திமுகவில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுகவில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு முடிந்தது.
பெரும்பாலான மாவட்டங்களில் இதுவரை நடந்த தேர்தல் எதிலும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நிர்வாகிகளுக்கு இடையிலேயே பேசி தீர்த்துக்கொண்டு தேர்தல் முடிந்தது.
இப்போது மாவட்ட செயலாளர்கள் தேர்விலும் பெரும்பாலும் நிர்வாகிகள் இடையே சமரசம் செய்து கொண்டு மாவட்ட செயலாளர்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

மாவட்ட செயலாளர்கள்
பெரும்பாலும் மாவட்ட அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் சொல்பவர்கள்தான் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தேர்வாகி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை எதிர்த்து பெரும்பாலான இடங்களில் யாருமே போட்டியிடவில்லை. உதாரணமாக கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும் மாவட்ட செயலாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் எதுவும் செய்யவில்லை.

கோவை அமைப்பு
இவர்கள்தான் கோவையின் அமைப்பு ரீதியான 3 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூன்று பேருமே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். இவர்களின் தேர்வு பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் போட்டி வேட்பாளர்கள் இல்லை என்பதால் இவர்கள்தான் கண்டிப்பாக அதிகாரபூர்வமாக மாவட்ட செயலாளர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

அதிமுக
இந்த கோவை மாவட்ட தேர்தல்தான் அதிமுகவிற்கு மிகப்பெரிய மெசேஜாக மாறி உள்ளது. கோவையில் மட்டுமின்றி கொங்கு முழுக்க அதிமுக தலைகளை இழுக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் மாற்று கட்சியினருக்கு இந்த தேர்தலில் பதவிகள் வாரி வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசன் மாவட்ட செயலாளர் ஆகிறார். இவர் தேமுதிக, காங்கிரசில் இருந்து திமுக வந்தவர்.

மாற்று கட்சி
கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவி மாவட்ட செயலாளர் ஆகிறார். இவர் திமுகவில் இருந்து மதிமுக சென்று பின்னர் திமுக வந்துள்ளார். இவர்கள் இப்படி மாற்று கட்சியில் இருந்து திமுக வந்தாலும் செந்தில் பாலஜியுடன் நெருக்கம், தலைமையுடன் நெருக்கம், தேர்தல் நேரத்தில் தீவிர பணி, ஜாதி ஆகிய காரணங்களால் மாவட்ட செயலாளர் ஆகும் வாய்ப்பை பெற்று உள்ளனர். அதிலும் இவர்கள் இருவரும் பொருளாதார ரீதியாக பலமாக இல்லை என்றாலும் மா. செ ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தூது
கிட்டத்தட்ட ஜாக்பாட் போல இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதுதான் அதிமுகவில் உள்ள சில தலைகளுக்கு அனுப்பப்பட்ட தூது என்கிறார்கள். எங்கள் கட்சிக்கு வந்தால் நல்ல பதவி கிடைக்கும். மா. செ தேர்தல் முடிந்துவிட்டது. இனி அந்த பதவி கிடைக்காது. ஆனாலும் மற்ற முக்கிய பதவிகள் திமுக வந்தால் கிடைக்கும் என்று திமுக சொல்லாமல் சொல்லி இருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவில் இருந்து திமுக வந்த பலர் நன்றாக இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்கள் திமுகவில் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். அதேபோல்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள மற்ற தலைகளையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இருக்கிறதாம். மாற்று கட்சியினருக்கு மா. செ. ஒன்றிய செ பதவி கொடுத்தது ஒரு சிக்னல் என்று உடன் பிறப்பு வட்டங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவில் அடுத்து எந்த தலை சூரியன் பக்கம் சாயும் என்ற பரபரப்பு ரத்தத்தின் ரத்தங்கள் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications