‛நாம் தமிழருக்கு விவசாயி சின்னம் கிடைக்காதது ஏன்?’ பாஜகவை விமர்சித்த சீமானுக்கு அண்ணாமலை தந்த பதிலடி
கோவை: ‛‛பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன்'' என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததற்கு பாஜகவை அவர் விமர்சித்தார். இந்நிலையில் தான் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்கு நாம் தமிழர் கட்சி தான் காரணம் எனக்கூறி அதன் பின்னணி பற்றி விளக்கியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை வேறு கட்சிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ஆக்ரோஷமாக தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான், ‛‛பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்தபிறகு, வழக்குத் தொடர்வேன். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். பள்ளிக் கூடங்களில் இருந்து நாட்டின் தேசிய மலர் தாமரை என்பதை படித்து வருகிறோம். அதை எப்படி தேர்தல் ஆணையம் ஒரு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிக்கான சின்னமாக ஒதுக்கியது.
நாம் தமிழர் கட்சிக்கு மயில் சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டபோது, அது தேசிய பறவை என்றுகூறி தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆனால், பாஜகவுக்கு எப்படி தாமரை சின்னத்தை ஒதுக்கியது. ஒன்று தேசிய மலராக தாமரையை அறிவித்துவிட்டு, பாஜகவின் சின்னத்தை எடுக்க வேண்டும். அல்லது தாமரையை பாஜகவுக்கு சின்னமாக அறிவித்து, தேசிய மலராக பிற மலரை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்'' எனக்கூறினார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் கூறியது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை,ல ‛‛ "நாம் தமிழர் கட்சிக்கு அவர்களுடைய சின்னம் வேண்டுமெனில் முதலில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. சென்னையில் வெள்ளம் வந்துவிட்டது. அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்தால், கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும்.
நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. இதனால் கட்சி சின்னத்தை புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி விண்ணப்பிக்கக் கூடாது? என்று நான் தடுக்கவில்லை. வேறொரு கட்சி விண்ணப்பித்து கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ளது. அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சிக்கு இதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம் ஒதுக்கப்படாததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரிதான். இத்தனை ஆண்டு காலமாக தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி ஏன் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், சம்பந்தமே இல்லாமல் சீமான் என் மீது பழி சுமத்துகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும். ஒரு கட்சியின் தலைவர், அவருடைய சின்னத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. எனவே, சீமான் உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். சீமான் முதலில் பிரதமர் மோடியை திட்டிக்கொண்டிருந்தார். இப்போது என்னைத் திட்ட ஆரம்பித்துள்ளார். விதிமுறைகளைப் பின்பற்றாமல், சின்னத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், தேர்தல் ஆணையம் எப்படி சின்னம் ஒதுக்கும்'' என பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications