ஒரே நேரத்தில் ஒரு மனிதர் எதற்காக 4000 மாத்திரைகள் வாங்க வேண்டும்? கோவை MyV3ads அடுத்த சர்ச்சை
கோவை: ஒரே நேரத்தில் ஒரு மனிதர் எதற்காக 4000 மாத்திரைகள் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள் கோவை மை வி 3 ஆட்ஸ் குறித்து அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு MyV3ads என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலி மூலம் அனுப்பப்படும் வீடியோக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.5 மூலம் ரூ.1,000 வரை பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த தனியார் நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாம்.

இதனை தொடர்ந்து அந்த MyV3ads ஆப்பை கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்து உறுப்பினர்களாக பதிவு செய்து செய்தனர்.
இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் எவ்வித வருவாயும் இன்றி, அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு எவ்வாறு அதிகப்படியான தொகையை கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுந்தது.மேலும் மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் பொதுமக்கள் சிலர் புகார் அளித்தனர். இதன்பேரில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியானந்த் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த ஜனவரி இறுதியில் திரண்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையில், அனுமதியின்றி திரண்ட இந்த கூட்டம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் சட்டவிரோதமாக கூடுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மெயின் வழக்கில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியானந்த்தை அண்மையில் அழைத்தனர். இதனைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாநகர குற்றப்பிரிவு போலீசில் தனது வக்கீல்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் சத்தியானந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கம்பெனியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எப்படி பணம் கொடுக்கப்படுகிறது?, மேலும் விற்கப்படும் பொருட்களின் விவரங்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.. அதற்கு நான் உரிய பதில் அளித்தேன். மேலும் என்னிடம் 87 வகையான விற்பனை பொருட்கள் இருக்கிறது... அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்பித்துள்ளேன். போலீசார் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்றார்.
இந்நிலையில் கோவை மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் மருந்துகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. மருந்துகள் விற்பனையில் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. அசோக் ஸ்ரீநிதி என்பவர் வெளியிட்ட பதிவில், பாமர மக்களை ஏமாற்ற வெறும் பொய்யை மட்டும் பேசுகிறார்கள். அதிகமான பொருட்களை (Direct selling) விற்கக் கூடாது என்று மத்திய நுகர்வோர் அமைப்பு தெளிவாக கூறியிருக்கிறது.
ஆனால் 1,21,000 கட்டினால் 40 மாத்திரை பெட்டிகள் கொடுக்கிறார்கள். ஒரு பெட்டிக்கு 100 மாத்திரை வீதம் 4000 மாத்திரைகளை விற்கிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 2 மாத்திரை எடுத்துக் கொண்டால் கூட, 5.5 வருடம் ஆகும் இந்த மாத்திரைகள் தீர. ஆனால் மாத்திரைக்கான காலாவதி தேதியோ 3 வருடங்கள் தான். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் எதற்காக 4000 மாத்திரைகள் வாங்க வேண்டும்?

அனைத்தும் சட்டப்படி குற்றம் என்று கூறியிருக்கிறார். அந்த பதிவுடன் கோவை மாநகர கமிஷ்னர் பாலகிருஷ்ணனையும் அவர் டேக் செய்து புகாராக இந்த தகவலை கூறியுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள iRoBo_V3.0 என்ற நெட்டிசன் கூறுகையில், அமலாக்கத்துறை வேற ஒரு MLM மோசடி வழக்குல சொல்லியிருக்க விசயம்..! MRPவிட 40% கம்மியான விலைக்கு வாங்கி மத்தவுங்களுக்கு வித்து இலாபம் பார்த்து அதுல பணம் குடுத்து MLM நடத்தி இருக்காங்க.. 60% லாபம் வச்சதே இங்க குற்றம்னா..!
MyV3Ads ஆயிர்வேத கேப்ஸ்யூல்ஸ் Rs.3900க்கு MRP போட்டு இருக்காங்க..! இதை தயாரிக்கிற நிறுவனம் Vee Herbal care இந்த மாத்திரைகள் MRP Rs.196னு A2D சேனல்ல இருந்து கால் பன்னினப்ப சொல்லி இருக்காங்க..! எத்தனை மடங்கு அதிகமா வச்சி கணக்கு காட்டி வாங்குற பணத்த லீகலா காட்ட வேலை பார்த்து இருக்காங்க..! 60 சதவிகித கூடுதல் விலையே தவறுனு வழக்கு இருக்கப்ப.. 18மடங்கு அதிக விலை கூட்டி கணக்கு காட்டி ஒரு மோசடி வேலைய நியாய படுத்துறது எந்த விதத்துல நியாயம்..! " என்று கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications