தினமும் அடித்து கொடுமைப்படுத்திய கணவர்.. பழிதீர்த்த மனைவி.. கோவையில் பயங்கரம்
கோவை: கோவை, சவுரிபாளையத்தில் கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு கணவர் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் மனைவி பழிதீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம், சவுரிபாளையத்தில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் சண்முகநாதன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சண்முகநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் பாக்கியம் மற்றும் குழந்தைகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சண்முகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாக்கியம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சண்முகநாதனின் சகோதரர் கேசவன், அவருடைய தங்கை மகாலட்சுமி ஆகியோர் சண்முகநாதனின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். சண்முகநாதனின் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், சண்முகநாதனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சண்முகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சண்முகநாதனின் மனைவி பாக்கியத்திடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில், தனது கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து குழந்தைகளையும், என்னையும் தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து எங்களைத் தாக்கினார். இதனால், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சண்முகநாதன் இரவில் நன்றாக தூக்கிக் கொண்டிருந்தார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.
கணவர் உயிரிழந்ததை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் நாடகமாடி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் பாக்கியத்தை கைது செய்தனர். சண்முகநாதனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாக்கியத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையையும், தாயையும் இழந்து நிற்கதியாக நிற்கும் குழந்தைகளின் அவல நிலை அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கணவனை மனைவியே கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications