நேரிலேயே கிளம்பி போறாரா எடப்பாடி பழனிசாமி? கோவை கோர்ட்டில் கேசி பழனிசாமி போட்ட கேஸ்! இன்று என்னாகும்
கோவை: அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 15 ம் தேதி ஆஜராகும்படி கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, கட்சியில் கோஷ்டிபூசல் வெடித்தது. அப்போது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் முன்னாள் எம்பியாக பதவி வகித்தவர் கேசி பழனிச்சாமி. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட புகாரில், கடந்த 2018 ம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறார்.
தன்னை போலவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள்.. இந்த ஒருங்கிணைப்பு குழு குறித்து ஒருமுறை எடப்பாடியிடம் கேள்வி எழுப்பினார்கள்.
ஒருங்கிணைப்புக் குழு
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "என்னை விமர்சனம் செய்த கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது. ரோட்டில் போவோர், வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது. ரோட்டில் போறவங்க ஒருங்கிணைப்புக் குழு என ஆரம்பித்தால் அதுக்கு அதிமுக பதில் சொல்லணுமா? அதுவும் கேசி பழனிச்சாமி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டவர்" என்றார்.
எடப்பாடியின் இந்த பதிலை பார்த்து ஆவேசமான கேசி பழனிச்சாமி, தன்னை பற்றி அவதூறாக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லிவிட்டதாக, கோவை குற்றவியல் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.. அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்த அந்த கருத்து தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் தந்தார்.
எகிறும் பரபரப்பு
இந்த வழக்கு கடந்த 2ம் தேதி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 15ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி இன்று ஏப்ரல் 15ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications