துணைவேந்தர் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிர்வாகம்! கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த சோதனை!
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி உட்பட பல வருடங்களாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.
குறிப்பாக இக்கோரிக்கையை சுட்டிகாட்டி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிலையை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சியாளர் பதவிகள், நிர்வாகத்தில் உள்ளவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பல காலியாக உள்ளது. இவற்றில் முக்கியமாக துணைவேந்தர் பதவி 18.10.2022 முதலும், பதிவாளர் பதவி 02.04.2016 முதலும், தேர்வாணையர் பதவி 15.04.2018 முதலும், கூடுதல் தேர்வாணையர் பதவி 20.08.2009 முதலும், இயக்குனர் SDE பதவி 21.08.2015 முதலும் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பதவி 08.06.2013 முதலும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனால் தற்பொழுது பணியில் இருக்கும் வேறு அதிகாரிகள் கூடுதல் பணியாக மேற்படி பதவிகளை வகித்து வருகின்றனர். இதனால் நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் காலம் தாழ்த்தியும் ஒரு சில முடிவுகள் உடனடியாக எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான வழக்குகளும் நிலுவையில் இல்லாத நிலை இருந்தும் மேற்படி முக்கிய பதவிகளை இன்னும் காலியாக வைத்துள்ளது
கவலையளிக்கிறது. துணை வேந்தர் காலி பணியிடத்திற்கு "மாண்பமை துணைவேந்தர் பொறுப்புக் குழு" என்ற முறையில் சுமார் ஒரு வருட காலமாக நடத்தி வருவதால் முடிவெடுப்பதில் காலதாமதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல 01.09.2023 தேதி படி ஆசிரியர் சார்ந்த பணியிடத்தில் சுமார் 63 காலி பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் சுமார் 281 காலி பணியிடங்களும் உரிய காலத்தில் நிரப்பப்படாமல் உள்ளது.
இவ்வாறு மிக அதிகமான அளவில் காலி பணியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்போது பணியில் உள்ள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகின்றனர். மேலும் சரியான நேரத்தில் பணிகளை செய்து முடிப்பதிலும் சுணக்கம் ஏற்படும். அவ்வாறு கூடுதல் பணி செய்யும் அலுவலர்கள் மன அழுத்தத்திற்கும், மனசோர்வுக்கும் ஆளாவார்கள். இதனால் செய்யும் பணிகளில் தவறுகள் நடக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
எனவே மேலே உள்ள அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆட்சியர், நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை விரைந்து போர்க்கால அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்து இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications