யூபிஎஸ்ஸில் தீவிபத்து.. தாய், 2 மகள்கள், செல்லப்பிராணி மூச்சுத்திணறலால் பலி.. கோவையில் சோகம்
கோவை: கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய், இரு மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு துறை
தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பெண்ணும் அவரது அம்மாவும் படுக்கை அறையில் இன்னொரு பெண்ணும் உடல் கருகி இறந்து கிடந்துள்ளனர்.

புகையால் மூச்சுத்திணறல்
இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது வீட்டின் ஹாலில் இருந்த யூபிஎஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது தாய் ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மூச்சுத்திணறலால் பலி
அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

செல்லப்பிராணியும் உடல் கருகி உயிரிழப்பு
மேலும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் அவர்கள் வளர்த்த செல்ல பிராணியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications