மெதுவா போகச் சொன்னது குத்தமா.. அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜூனியர் ராஜா மீது சரமாரியாக கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் உட்பட இரண்டு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் கோபிநாத். இவர், கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இவர்மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து கோபிநாத் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.

கோபிநாத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் படிக்கும்போது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது, 92 வது வார்டு அதிமுக பிரமுகரான ஜூனியர் ராஜா கோபிநாத்தின் வாகனத்தை நிறுத்தி மெதுவாகப் போகும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஜூனியர் ராஜாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் கட்டாயம் இந்த விஷயத்துக்கு பழிவாங்குவேன் என்று ராஜாவை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் இருந்து கோபிநாத் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். குனியமுத்தூர் பகுதியில் ஜூனியர் ராஜா நடந்து சென்றுள்ளார். அப்போது, கோபிநாத் தன்னுடைய நண்பர் பூமிஸ்வரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்காக பழிவாங்கும் வகையில், ராஜாவை பார்த்ததும் அவரை விரட்டிச்சென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை சற்றும் எதிர்பாராத ராஜா தடுக்க முயன்றுள்ளார். இதில், ராஜாவின் 2 கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதைப் பார்த்த அருகில் இருந்த பொது மக்கள் கோபிநாத் மற்றும அவரை நண்பரை விரட்டியபோது தப்பி ஓடியுள்ளனர். பலத்த காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்டையே தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதே பகுதியில் தலைமறைவாக இருந்த கோபிநாத், அவருடைய நண்பர் பூமிஸ்வரன் ஆகிய 2 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய அவர்களது இருசக்கர வாகனம் மற்றும் அரிவாள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குனியமுத்தூர் பகுதியில் அதிமுக பிரமுகர் ராஜாவை முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications