கோவையை அதிரவைத்த இளைஞர்.. காதலியை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் செய்த பகீர் சம்பவம்
கோவை: கோவையில் 15 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்கி தன்னுடைய காதலி குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்த இளைஞரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் கலாசாரம் இளைஞர்களிடையே தலைதூக்கி உள்ளது. உலக நடப்புகள், பொது செய்திகளை அறிந்து கொள்ளும் தளமாகவும், நட்பு, காதல் என்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இடமாகவும், தொழில், வியாபாரம் போன்றவற்றை பிராண்டிங் செய்வது போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை தாண்டி சமூக விரோத செயல்களுக்கான தளமாகவும் சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.

போதைப் பொருள் விற்பனை, ஒரு கும்பலை பழிவாங்க மற்றொரு கும்பல் பதிவிடுவது, அவதூறு கருத்துகளைப் பரப்புவது, போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்கி மோசடி செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கோவையில் 15 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்கி தன்னுடைய காதலி குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்த இளைஞரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விமல்குமார். இவரும், கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் விமல்குமாரிடம் பேசுவதை அந்த மாணவி தவிர்த்து வந்துள்ளார். ஆனால், தன்னிடம் வழக்கம் போல பேச வேண்டும் என தொடர்ந்து விமல்குமார் மாணவியை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மாணவி அந்த இளைஞரிடம் பேச மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த விமல்குமார், போலியாக 15 இன்ஸ்டாகிராம் கணக்குகளை துவங்கி அதில் மாணவி குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விமல் குமார் கைது செய்யப்பட்டார்.
அந்த இளைஞர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை சார்பில் கூறுகையில், மேட்டுப்பாளையம், கணுவாய்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விமால் குமார் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் தன்னிடம் முன்பு போல் அன்பாக பேசி பழகாததால் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 அக்கவுண்டுகள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கியுள்ளார்.
பின்னர், அந்த இன்ஸ்டா கணக்குகள் மூலம் அந்தப் பெண்ணை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அந்தப் பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும், இதனால் அந்த பெண் கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மூலம் மேல் கண்ட எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலி பேசுவதை தவிர்த்ததால் 15 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்கி தொடர்ந்து அந்த மாணவி குறித்து இளைஞர் அவதூறு கருத்துகளை பரப்பியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications