சூட்கேஸில் அரைநிர்வாணமாக கிடந்த தேனி பெண் உடல்.. நடந்தது என்ன? கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
கோவை: கள்ளக்காதலியை கொன்று அவரது உடலை சூட்கேஸில் வைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியது ஏன் என்பது குறித்து கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே கடந்த 20ஆம் தேதி ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதன் அருகே கடும் துர்நாற்றம் வீசியது. உடனே அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்களும் அந்த இடத்தில் பார்த்த போது புதர் போல் இருந்தது. ஆனால் ஒன்றும் தெரியவில்லை. இதனால் ஏதாவது காட்டு விலங்கு இறந்திருக்கலாம் என கருதினர். அப்போது அந்த இடத்திற்கு செல்ல செல்ல துர்நாற்றம் அதிகரித்தது. அப்போது அங்கு ஒரு சூட்கேஸ் இருந்தது.
அரை நிர்வாணம்: உடனே அதை திறந்து பார்த்த போது அரை நிர்வாணமாக இளம்பெண்ணின் உடல் இருந்ததை அறிந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு அந்த சூட்கேஸில் ஒட்டப்பட்டிருந்த கடை பெயர்தான் உதவியது.
கோவைக்கு சென்ற போலீஸ்: உடனே போலீஸார் கோவையில் உள்ள சூட்கேஸ் கடைக்கு சென்று அந்த சூட்கேஸை யார் வாங்கியது என விசாரணை நடத்தினர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த நட்ராஜ் என்பவர் வாங்கியது தெரியவந்தது. பிறகு கோவையில் தனது நண்பருடன் இருந்த நட்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீஸார் விசாரணையில் நட்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 5 வயது, 2 வயதில் இரு மகள்களும் உள்ளனர். ஐடிஐ படித்துள்ள நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்தேன்.
ஒரே அலுவலகம்: அதே நிறுவனத்தில் கணினி பிரிவில் என்னுடன் வேலை பார்த்து வந்த தேனியை சேர்ந்த சுபலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் திருமணமான விவரத்தை மறைத்து சுபலட்சுமியுடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.
பிறகு திருமணம் செய்யலாம் என நினைத்து கோவைக்கு வந்தோம். சுபலட்சுமியும் வெளிநாட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கு சில நாட்கள் இருந்து விட்டு மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதாக சென்றுவிட்டு கோவை வந்தோம். அதே போல் கோவையில் வீடு எடுத்து செட் ரைட் செய்துவிட்டு நானும் மன்னார்குடிக்கு சென்று எனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு, மீண்டும் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன்.
வீடியோ கால்: எனது மனைவியிடம் அவ்வப்போது வீடியோ காலில் மட்டும் பேசி வந்தேன். இந்த நிலையில் சுபலட்சுமியுடன் ஒரு ஆண்டு சந்தோஷமாக வாழ்ந்தேன். அவருக்கு என் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருந்தது. இதனால் அவர் செய்த கருத்தடை ஆபரேஷனை மறு ஆபரேஷன் செய்து அந்த கருத்தடையை நீக்கினார்.
இதையடுத்து சுபலட்சுமி வீட்டில் ஓய்வில் இருந்த போது எனது அப்பா, அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கூறினேன். என் மனைவியை பார்க்கச் சென்ற போது என் கையில் சுபலட்சுமி என இருந்த டாட்டூவை மனைவி பார்த்துவிட்டார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த டாட்டூவை அழித்தேன்.
பிறகு சில காலம் கழித்து மீண்டும் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு வந்தேன். அங்கு டாட்டூ அழித்திருப்பதை பார்த்து சுபலட்சுமி கேட்டார். அப்போது என் அப்பா, அம்மாவுக்கு காதல் விவகாரம் தெரியக் கூடாது என்பதால் அழைத்ததாக கூறி சமாளித்தேன். ஆனாலும் சுபலட்சுமிக்கு நம்பிக்கை வரவில்லை.
கத்தாரில் வேலை: இதனால் என் செல்போனை பார்த்துள்ளார். அப்போது அதில் என் குழந்தைகளின் படம் இருந்தது. யார் என கேட்டு தகராறில் ஈடுபட்ட போது "ஆமாம் எனக்கு திருமணமாகிவிட்டது, அதனால் என்ன இப்ப" என கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த சுபலட்சுமி, "உனக்காக என் கத்தார் வேலையை உதறிவிட்டு கோவைக்கு வந்தேன், கருத்தடையை நீக்கினேன், எனக்கு எப்படி துரோகம் செய்வாய், இரு உன் ஊருக்கு வந்து உன் மனைவியிடம் நியாயத்தை கேட்கிறேன்" என மிரட்டினார்.
கோபத்தில் செய்த தவறு: இதனால் கடும் கோபமடைந்த நான் அங்கிருந்த இரும்பு ராடை கொண்டு சுபலட்சுமியின் தலையில் போட்டேன். அவர் இறந்துவிட்டார். பிறகு எனது நண்பர் கனிவளவனின் உதவியுடன் உடலை சூட்கேஸில் வைத்துவிட்டு எங்கு கொண்டு போய் வீசலாம் என யோசித்தோம் . பிறகு வாடகைக்கு நாமே ஓட்டும் வகையிலான காரை பிடித்து அதில் நானும் என் நண்பரும் உடலுடன் இரு நாட்கள் சுற்றித் திரிந்தோம்.
கதறும் கள்ளக்காதலன்: அப்போதுதான் சுபலட்சுமியுடன் ஏற்கெனவே ஏற்காடுக்கு சென்றது நினைவுக்கு வந்தது. உடனே ஏற்காட்டிற்கு சென்று அங்கு ஆள் அரவம் இல்லாத இடத்தில் சூட்கேஸை வீசிவிட்டு மீண்டும் கோவைக்கே வந்துவிட்டேன். விரைவில் கத்தார் செல்ல திட்டமிட்டிருந்தேன். அதற்குள் சிக்கிக் கொண்டேன். ஆத்திரத்தில் செய்துவிட்டேன். என்னை யாராவது ஜாமீனில் எடுங்கள். இவ்வாறு வாக்குமூலம் அளித்திருந்தார். தேனி பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications