ஊருக்குள் இறங்கிய கொம்பன்.. விரட்டச் சென்ற இளைஞர்கள்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்
கோவை: மனித - விலங்கு மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானையை விரட்டிச் சென்ற இளைஞர்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலத்தில் யானைகள் ஊரை நோக்கி வரும் நிலையில், இந்த மழைக்காலத்தில் நடந்துள்ள யானை தாக்குதல் சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான தொண்டாமுத்தூர், அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக கெம்பனூர், விராலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களைச் சேதப்படுத்துவதுடன், தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் புண்ணாக்கு, தவிடு, ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்களைச் சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. மேலும், இந்த யானைகள் வீட்டை உடைத்து உணவுப் பொருட்களைத் தேடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், விராலியூர் கிராமத்திற்குள் நேற்று இரவு 8 மணி அளவில் ஒற்றை ஆண் யானை புகுந்துள்ளது. அப்போது, ஊருக்குள் உள்ள பெருமாள் கோவிலில் பூஜைகளை முடித்துக் கொண்டு கோவில் பூசாரி பாஸ்கரன் என்பவர் அருகே உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பாஸ்கரனை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியதில் அவர் பலத்த காயமடைந்தார். பாஸ்கரனின் அலறல் சப்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சப்தம் எழுப்பி யானையை விரட்டினர். தொடர்ந்து, பாஸ்கரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், அந்த யானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாகச் சென்றது. இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டே யானையின் பின்னால் விரட்டிச் சென்றனர். அப்போது, திடீரென யானை திரும்பி இளைஞர்களை விரட்டத் துவங்கியது. விராலியூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் யானையிடம் இருந்து தப்பித்து ஓடினர். அப்போது, யானை தாக்கியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து, போளுவாம்பட்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் இணைந்து ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், விராலியூர் பகுதிக்குள் மீண்டும் புகுந்த அதே யானை தாக்கியதில் இன்று காலை மூன்று பேர் காயமடைந்தனர். இதனிடைய ஊருக்குள் புகுந்த யானையை இளைஞர்கள் விரட்டிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், கார்த்திக் தனது நண்பருடன் யானையை துரத்திச் செல்லும் காட்சிகளும் வெளியாகி வைரலாகி உள்ளது.
மனித - விலங்கு மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊருக்குள் அல்லது விவசாய நிலங்களுக்குள் யானைகள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடக் கூடாது என ஏற்கனவே வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications