தீரன் பட ஸ்டைலில் ஆயுதங்களுடன்.. வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த இளைஞர்கள்.. கோவையில் திக் திக்
கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் பட்டப்பகலில் அதிபயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்களை கோவை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கார்த்தி நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. லாரிகளில் வரும் வடமாநிலக் கொள்ளையர்கள் போர்வை, பெட்சீட் போன்றவற்றை விற்பதுபோல வந்து வீடுகளை முதலில் நோட்டமிடுவார்கள். பின்னர், நள்ளிரவு நேரங்களில் வீடுகளின் கதவைத் தட்டி கொடூர ஆயுதங்களைக் கொண்டு வீட்டில் உள்ளவர்களைத் தாக்கி கொள்ளையடித்துச் செல்வார்கள்.

தீரன் படத்தைப் பார்த்த பின்னர் ஒருவிதமான அச்சம் மனதுக்குள் தொற்றிக் கொள்ளும் என்றே செல்லலாம். அந்த அளவுக்கு, கொடூரமானக் காட்சிகளுடன் திக் திக்கென்ற நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு வீட்டில் பகல் நேரத்தில் கொடூரமான ஆயுதங்களுடன் நுழைந்த இளைஞர்கள் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியில் உள்ள எஸ்.வி.டி கார்டனில் வசித்து வருகிறார் தங்கவேல். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இவரது வீட்டில் யாரும் இல்லையாம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதிபயங்கரமான ஆயுதங்களை கையில் ஏந்தியவடி முகத்தை மறைத்துக் கொண்டு இரு கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அப்போது, வீட்டைச் சுற்றிப் பார்த்து பொருள்களை கலைத்து தேடியுள்ளனர். பின்னர், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் தங்கவேல் அன்னூர் காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னூர் போலீஸார் தங்கவேலுவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்கிற முனியாண்டி (24) என்பவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட 8 சவரன் தங்க நகை, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜித் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து வீட்டைச் சுற்றி வந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல, கோவை சரவணம்பட்டியில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து வங்கி அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து திருடன் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். வீட்டில் தங்க நகைகள் எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற சம்பவம் கடந்த வாரத்தில் நிகழ்ந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications