இலங்கையே கொந்தளிக்கிறது.. கண்ணியம் இருந்தால் இப்போதாவது ராஜினாமா செய்யுங்கள்! ஜெயசூர்யா சுளீர்
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டு உள்ளார்
Recommended Video
இலங்கை நாட்டில் மக்கள் போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது என்று கூறலாம். அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி இன்னும் கூட சீரடையவில்லை.
எரிபொருள், மின்சாரம், மருந்து என அடிப்படை பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர்.

இலங்கை
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பாதுகாப்பையும் மீறி இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அங்குள்ள அதிபரின் கொடி அகற்றப்பட்டு, இலங்கை நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

மக்களுடன் நிற்கிறேன்
ஒவ்வொரு நாளும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டு உள்ளார். இது தொடர்பாக சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கிறேன். வெற்றியை விரைவில் கொண்டாடுவோம். மக்கள் போராட்டம் தொடர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜினாமா
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவர் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று பிடிவாதமாக உள்ளார். இது குறித்து ஜெயசூர்யா தனது ட்விட்டரில், "முற்றுகை முடிந்துவிட்டது. உங்கள் கோட்டை வீழ்ந்தது. மக்கள் சக்தி வென்றது. இப்போதாவது கண்ணியத்துடன் ராஜினாமா செய்யுங்கள் #GoHomeGota" என்று ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார்.

கொழும்பு துறைமுகம்
மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவத் தலைமையகத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று அவர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து தப்பிச் சென்று உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications