சீனாவின் ஆதிக்கம் தொடங்கும்.. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கம் - பேக்.. இந்தியாவிற்கு சிக்கலா?
இலங்கையில் நடக்கும் அதிபர் தேர்தல் முடிவுகளையும், அரசியல் மாற்றங்களையும் இந்தியா மிக தீவிரமாக கவனித்து வருகிறது.
கொழும்பு: இலங்கையில் நடக்கும் அதிபர் தேர்தல் முடிவுகளையும், அரசியல் மாற்றங்களையும் இந்தியா மிக தீவிரமாக கவனித்து வருகிறது. ஆசிய அரசியலில் இலங்கை அதிபர் தேர்தல் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால் கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவி ஏற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று மாலை அல்லது நாளை தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
பின்னடைவாக பார்க்கப்படுகிறது
இது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மகிந்த ராஜபக்சே 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற இந்திய உளவு அமைப்பான 'ரா' காரணம் என குற்றம்சாட்டியவர். ஆம் அவர் அப்போதே ரா மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருந்தார். சிறிசேனாவும் அவரும் எதிரும் புதிருமாகவே அப்போது இந்த தேர்தலை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் குடும்பம்
தற்போது மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிரானவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு ஆதரவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே குடும்பம் சீனாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது.
இந்தியா வந்தாலும்
ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவிற்கு அடிக்கடி வந்தாலும், அவர்கள் சீனாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். இலங்கை தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இருந்தே ராஜபக்சே குடும்பம் சீனாவிற்கு ஆதரவாக இருக்கிறது. சீனா உலகம் முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் தங்களது கடற்படை தளவாடங்களை அமைத்து வருகிறது.
பாதுகாப்பு
இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வருகிறது. இதற்கு பிரதமர் ரணிலை வைத்து இந்தியா முடிந்த அளவு முயன்று வந்தது. ஆனால் தற்போது மொத்தமாக ராஜபக்சே குடும்பத்திற்கு அதிபர் பதவி செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
என்ன செய்ய போகிறார்
மகிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனா இலங்கையில் போர் பயிற்சிகளை செய்தது. அங்கு சீனா ராணுவம் நிறைய உளவு பணிகளை செய்தது. இப்போதும் கூட சீனாவிற்கு ஆசியாவில் முக்கிய நண்பனாக மகிந்தா ராஜபக்சே இருக்கிறார். இதனால் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனால் சீனா மீண்டும் இலங்கையில் கால் பாதிக்கும்.
என்ன பாதிப்பு
அங்கு கடற்படையின் தளவாடங்களை அமைக்க சீனா முயலும். பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு இது பெரிய அச்சுறுத்தலாக மாறும். ஆசிய அரசியலில் சீனா மீண்டும் அண்ணனாக மாற வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா விரைவில் அத்துமீறும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.