என்னிடம்கூட சொல்லாமலேயே இலங்கையை விட்டு ஓடிப் போனார் கோத்தபாய ராஜபக்சே: மகிந்த ஆதங்கம்
கொழும்பு: இலங்கையைவிட்டு தப்பி ஓடும் போது தமது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்சே தம்மிடம் ஆலோசிக்கவில்லை என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Recommended Video
இலங்கையின் சண்டே டைம்ஸ் வார இதழுக்கு மகிந்த ராஜபக்சே அளித்த விரிவான நேர்காணலில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு கோத்தபாய மட்டுமே காரணம் அல்ல. நானும் முந்தைய அரசுகளும்தான் பொறுப்பு. அனைவரும்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
அதேநேரத்தில் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே செய்ய வேண்டியதை செய்திருக்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை அரசியல்வாதி அல்ல.
கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடும் முன்பாக என்னுடன் ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் செய்யவில்லை. கோத்தபாய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சென்றிருக்கக் கூடாது. இலங்கையை விட்டு தப்பிச் செல்ல அவராகவே முடிவு எடுத்தார். அதை என்னிடம் சொன்னார். அதாவது இலங்கையைவிட்டு தப்பி ஓடப் போகிறேன் என்றார். நான் அதற்கு பதில் எதுவும் சொல்லவும் இல்லை.
ஒருவேளை கோத்தபாய ராஜபக்சே, இலங்கையை விட்டு ஓடிப் போகலாமா? என என்னிடம் கேட்டிருந்தால் நான் வேண்டாம் என தடுத்திருப்பேன். கோத்தபாய தாம் நம்பிய வல்லுநர்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டார். குறிப்பாக மத்திய வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்கள் பேச்சைத்தான் கேட்டார்.
இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த போது சிறப்பாகவே இயங்கினார் கோத்தபாய. ஜனாதிபதி பதவி வகித்த போது அவருக்கும் நெருக்கடி அதிகமாக இருந்தது. பாதுகாப்புத் துறை செயலர் பொறுப்பில் இருந்த போது அவர் கடுமையானவராக இருந்தார். ஆனால் ஜனாதிபதியான போது மென்மைப் போக்கை கடைபிடித்தார். இலங்கையில் பொருளாதாரத்தை சீரமைக்கக் கூடிய ஒரே ஒருவர் ரணில் விக்கிரமசிங்கேதான். அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அதனால்தான் ரணில், ஜனாதிபதியானதை வரவேற்றேன்.
இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்சே- காத்திருக்கும் பிரதமர் பதவி- ராஜினாமா செய்யும் பெண் எம்.பி.!
இலங்கை அரசியலில் இருந்து இப்போதைக்கு நான் ஓய்வு பெறப் போவது இல்லை. அதை உரிய காலத்தில் முடிவெடுத்து அறிவித்துவிட்டுதான் ஓய்வு பெறுவேன். அரசியல் ஓய்வுக்குப் பிந்தைய காலம் தொடர்பாகவும் ஆலோசித்திருக்கிறேன். அதுவரை அரசியலை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறினார்.