கொழும்பு அருகே மனிதவெடிகுண்டுகளின் 'டிரெயினிங்' வீடியோக்களை கைப்பற்றியது ராணுவம்!
கொழும்பு: ஈஸ்டர் நாளில் 359 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகளின் கூட்டாளிகளை இலங்கை ராணுவத்தினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கொழும்பு அருகே மனிதவெடிகுண்டு நபர்களின் உறவினர் நடத்தி வந்த வர்த்தக நிறுவனத்தில் இருந்து ஏராளமான டிரெயினிங் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரான் ஹாசீம் தலைமையில் இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த நாசகார கும்பலே ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள் , ஹோட்டல்களை குறிவைத்து மனிதவெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

உலகையே அதிரவைத்த இப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை முற்றுகையிட்ட போது மனிதவெடிகுண்டுகளாக வெடித்து சிதறினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலருக்கும் இத்தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கொழும்பு அருகே தற்கொலைப்படையினரின் உறவினர் நடத்தி வந்த வர்த்தக நிறுவனத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.
ஷூக்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தங்களது மறைவிடமாக தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தது இச்சோதனையில் தெரியவந்தது. அந்த நிறுவனத்தில் மனிதவெடிகுண்டு நபர்கள் பயிற்சி எடுப்பதையும் அவர்களுக்கு சஹ்ரான் ஹாசீம் வழிகாட்டுவதையும் அம்பலப்படுத்தும் வீடியோக்கள் சிக்கின.
மேலும் எரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளையும் ராணுவத்தினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications