உணவு பஞ்சம்! 50 டிரில்லியன் டாலர் கடன்! அப்படியே குலைந்து போன பாகிஸ்தான்.. இம்ரான் செய்தது என்ன?
கொழும்பு: இலங்கையை போலவே பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. பாகிஸ்தானின் நிதி நெருக்கடி காரணமாக அங்கு ஏற்கனவே பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் இம்ரானுக்கு வழங்கிய ஆதரவை இன்று வாபஸ் பெற்றது.
இதன் காரணமாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் எம்பிக்கள் 22 பேர் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர் . நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

கவிழும்
இதனால் இம்ரான் கான் அரசு கவிழும் அபாயம் உள்ளது. பாகிஸ்தானை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறேன். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இம்ரான் கான். ஆனால் மோசமான பொருளாதார கொள்கைகள், சீனாவிடம் வாங்கிய கடன், ஏற்றுமதி தட்டுப்பாடு, அன்னிய செலாவணி தட்டுப்பாடு என்று பல காரணங்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

பண மதிப்பு
பாகிஸ்தானில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வருட தொடக்கத்தில் 108 என்ற அளவில் இருந் மதிப்பு இந்த வருடம் தற்போது 182 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆம் 1 டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 182 ஆகும். அந்த அளவிற்கு அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. போர் நடக்க கூடிய ரஷ்யாவில் கூட ரூபிள் மதிப்பு 82 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1 வருடத்தில் அந்நாட்டு பண மதிப்பு 16 சதவிகிதம் வரை சரிவை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் அளவு
அதோடு அந்நாட்டு மொத்த ஜிடிபிக்கு நிகரான கடன் அளவும் உச்சத்தை தொட்டுள்ளது. மொத்த ஜிடிபிக்கு நிகரான கடன் அளவு அங்கு கடந்த 2019ல் 86 சதவிகிதமாக இருந்தது. இது தற்போது 88 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் ஏற்றுமதிக்கு நிகரான நிகர இறக்குமதி கடனும் அதிகரித்து உள்ளது. 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது . உலகில் எந்த நாடும் இவ்வளவு மோசமான நிலையில் இல்லை. அதாவது 15 பில்லியன் டாலர் கடன் விகிதம் உள்ளது. உலகில் வேறு எந்த நாடும் 5 பில்லியன் டாலர் கடன் விகிதத்திற்கு மேல் கொண்டு இருக்கவில்லை (மங்கோலியா தவிர்த்து).

உணவு தட்டுப்பாடு
பாகிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடும் உள்ளது. அங்கு பார்லி, கோதுமையும் ஏப்ரல் வரை மட்டுமே கையிருப்பில் இருக்கும். உற்பத்தி உடனே தொடங்கப்படவில்லை என்றால் அந்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். அதேபோல் காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அங்கு சில்லறை பணவீக்கம் 12.2 சதவிகிதமாகவும்., மொத்த பணவீக்கம் 23.6 சதவிகிதமாகவும் உள்ளது. பாகிஸ்தானின் மொத்த கடன் 50 டிரில்லியனை கடந்துள்ளது.

மின் தட்டுப்பாடு
வெறும் 39 மாதத்தில் 20 டிரில்லியன் கடனில் இருந்து 50 டிரில்லியனாக இது உயர்ந்துள்ளது. அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தற்போது 5000 மெகாவாட் மின் தட்டுப்பாடு அங்கு தினமும் நிலவி வருகிறது. இந்த அளவிற்கு அங்கு இதற்கு முன் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை. கச்சா எண்ணெய் , நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அங்கு இவ்வளவு மோசமான நிலை நிலவுகிறது. இதனால் தினசரி மின்வெட்டு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது.

உணவு பஞ்சம்
பாகிஸ்தானில் விரைவில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகி உள்ளன. தற்போது பெட்ரோல் விலை 149.86 ரூபாயாகவும் , டீசல் விலை 118.31 ரூபாயாகவும் உள்ளது. இலங்கைக்கு நிகரான பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டில் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் புதிய ஆட்சி அங்கு உருவாக்கப்பட்டாலும் உடனே பொருளாதாரம் சீரடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications