தெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்
கொழும்பு/மாலே: பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற உடனேயே தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனா சார்பு நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாலத்தீவு மற்றும் இலங்கை பயணங்களை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனா ஆதரவு நிலையை வெளிப்படுத்தி வந்தன. மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
இந்தியாவின் உதவிகளை யாமீன் நிராகரித்து திருப்பி அனுப்பினார். இநிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியா ஆதரவு பெற்ற முகமத் சாலி அதிபரானார். அவரது வெற்றியைத் தொடர்ந்து மாலத்தீவு- இந்தியா இடையேயான உறவு வலுவடைந்தது.

மைத்திரியும் இந்தியாவும்
அதேபோல் இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனா- ரணில் ஆகியோரை ஒருங்கிணைத்ததில் இந்தியாவின் பங்களிப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியது.

ராஜபக்சே மூலம் செக்
இதையடுத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜ்பக்சே அரசியல் ஆடுகளத்திற்கு வந்தார். அவரை களமிறக்கியதே இந்தியாதான் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இதனால் இப்போது சீனாவின் ஆதிக்கம் குறைந்து இந்தியாவின் கைதான் இலங்கையில் ஓங்கி இருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தில் இந்தியா
அண்மையில் கூட கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் செய்யும் பணிகளை பெற்றது இந்தியா. இந்த நிலையில் பிரதமர் மோடியின் மாலத்தீவு, இலங்கை பயணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

பூடான் ,நேபாளம்
தற்போதைய நிலையில் இந்த இரு நாடுகளின் சீனா சார்பு வேகத்தை மோடியின் பயணம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. ஏற்கனவே நேபாளம் முற்று முழுதாக சீனாவின் காலனி நாடாகவே உருமாறி இருந்தது. அந்நாடு பெருவெள்ளத்தில் சிக்கிய போது இந்தியா கடும் நெருக்கடி கொடுத்து பணிய வைத்தது. இதில் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரான அப்போதைய வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கரின் பங்கு மிக முக்கியமானது. மேலும் டோக்லாமை முன்வைத்து பூடானுக்கு சீனா குறி வைத்தது. ஆனால் இந்திய அரசின் திடமான எதிர்ப்பால் டோக்லாமில் இருந்து சீனா பின்வாங்கியது. இந்த இருநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதன் மூலம் தெற்காசியாவில் இந்தியா இழந்த பிடியை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் என்கின்றன வெளியுறவு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications