இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வு..மும்முனைப் போட்டியில் வென்றார்
இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவிய நிலையில் எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெற்றது.

சஜித் பிரேமதாசா
முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார். தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, டலஸ் அழகப்பெருமா அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார்.

மும்முனை போட்டி
பிரேமதாசா விலகலை தொடர்ந்து இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டலஸ் அழகப்பெருமா ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது.

யாருக்கு ஆதரவு
மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலர் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டலஸ் அழகப்பெருமாவை அதிபராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும் தேர்வு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது இதன் காரணமாகவே சஜித் பிரேமதாசா அதிபர் போட்டியிலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.

ரணில் விக்ரமசிங்
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் முதல் முறையாக அந்நாட்டு சபாநாயகரும் வாக்களித்தார். இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவைப் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபராக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க 28 மாதங்கள் அதிபர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

29 ஆண்டுகளுக்குப் பின்
கடந்த 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இடைக்கால அதிபரை தேர்வு செய்வது இதுவே முதல் முறை. 1993ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் டி.பி.விஜேதுங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தினால் அதிபரை தெரிவு செய்த அனுபவம் இதற்கு முன்னர் இருந்த போதிலும், இது சிறப்பு வாய்ந்தது. 1993 இல், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மறைவைக் கருத்தில் கொண்டு, டி.பி. விஜேதுங்க அதிபரின் மீதமுள்ள பதவி காலத்திற்கு வாக்கெடுப்பே இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை மும்முனை போட்டி நிலவியதால் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 223 பேர் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகிய 2 பேர் பங்கேற்கவில்லை. ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அதிபராக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

134 வாக்குகள் பெற்ற ரணில் விக்ரமசிங்க
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று அதிபரானார் ரணில் விக்ரமசிங்க. இவர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபர் பதவியில் இருப்பார். டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 எம்பிக்கள் அளித்த வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் 6 முறை பிரதமராக இருந்த ரணில் 8வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஆதரவு கிடைத்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications