இலங்கை தேர்தல் தோல்வி...தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய இருப்பதாக கட்சியின் பொதுச் செயாலாளர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், உலக அரங்கில் அடையாளப்படுத்தப்பட்ட முக்கிய தலைவராகவும் வலம் வந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே. இவர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சமீபத்தில் நடந்து முடிந்த அந்த நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. இதையடுத்து கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவாசம் கூறுகையில், ''கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் முடிவு செய்து இருக்கிறார். கட்சியை மறுகட்டமைப்பு செய்ய முடியும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சிக்கான புதிய தலைவர் இன்று நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கு முன்னதாக இலங்கை மக்கள் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அதிபர் கோத்தபய ராஜபக்சாவின் இலங்கை மக்கள் கட்சி பெற்றுள்ளது. இலங்கை மக்கள் கட்சி (எஸ்எல்பிபி) தலைவராகவும் 74-வயதாகும் மகிந்த ராஜபக்ச இருக்கிறார். இவர் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ச நாட்டின் அதிபராகவும், இளைய சகோதரர் பசில் ராஜபக்ச கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர். இலங்கை அரசியலில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ராஜபக்ச குடும்பத்தினர் கோலோச்சி வருகின்றனர்.
மூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை மக்கள் கட்சி போட்டியிட்ட 196 இடங்களில் 150 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் 225. இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 லட்சம் வாக்குகளை மகிந்த ராஜபக்ச பெற்றிருந்தார். இவர் இதற்கு முன்னதாக நாட்டின் அதிபராக 2005 முதல் 2015ஆம் ஆண்டுவரை இருந்து இருக்கிறார்.