நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்
கொழும்பு: தாம் ராஜபக்சே கூட்டாளிகள் கிடையாது; ராஜபக்சேக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். முன்னதாக ரணில் விக்கிரமசிங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எமது அரசு ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடம்தர முடியாது.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அனைத்து தரப்பும் ஏன் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது? என்பது மக்களின் கேள்வி. எதிர்ப்பு அரசியல் என்பது நாட்டை சூனியமாக்குகிறது என்பது இளைஞர்களின் கருத்து. இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குரலுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும்.
அமைதி வழி போராட்டங்களுக்கு அப்பால், வீடுகளை தீக்கிரையாக்குதல், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுதல், பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுதல் என்பது ஜனநாயக வழிப் போராட்டங்கள் அல்ல. ஆகையால்தான் அமைதி வழி போராட்டங்கள்தான் சரி என்கிறோம்.
இலங்கையின் அரசியல் சாசனப்படி எம்.பி.க்களால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரே ஒரு எம்.பி. என்னால் இலங்கை நாட்டின் பிரதமரை எப்படி தேர்வு செய்ய முடியும்? அது குறித்து ஆலோசிக்கிறோம்.
ராஜபக்சே சகோதரர்களுக்கு எப்படி நான் நண்பராக இருக்க முடியும்? அனைத்து சந்தர்ப்பங்களிலும் ராஜபக்சேக்களை நான் எதிர்த்தே அரசியல் செய்திருக்கிறேன். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல. இந்த நாட்டின் மக்கள். ஆகையால் தெளிவான சிந்தனையுடன் என்னை நோக்கி கேள்விகளை முன்வையுங்கள். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.












Click it and Unblock the Notifications