பெட்ரோல், டீசல் இருந்தால்தானே எங்கள் வீட்டை எரிப்பீங்க.. விற்பனைக்கே தடை விதித்த இலங்கை
கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்..பட்டினத்தாரின் வரிக்கு சரியான சாட்சி இப்போது.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
பணமின்றி தவிக்கும் இலங்கை
மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் இலங்கையிடம் கையிருப்பில் இருந்த தொகை வெறும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதன் மூலம் இலங்கையால் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாது.
பல துறையினர் போராட்டம்
இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இலங்கை அரசுக்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். கோ கோட்டா என்ற முழக்கத்துடன் ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் போராடி வருகின்றனர்.
வன்முறை
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.
மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீட்டை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களையும் இலங்கை மக்கள் தகர்த்து வருகின்றனர். தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ஷே இலங்கை திரிகோணமலையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
எரிபொருள் விநியோகம் நிறுத்தம்
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அரசு இடங்கள், ராஜபக்ஷேக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து வருவதால் எரிபொருள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறி வருவதால் வீணாவதை தடுக்கவும், வன்முறைகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை மக்கள், முதல்முறையாக அரசுக்கு எதிராக கிளர்ந்து எழத் தொடங்கிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டபோதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.