சுற்றி கடல் இருந்தும்.. தீவு நாடான இலங்கையில் உப்பு தட்டுப்பாடு! ஏன் தெரியுமா? இந்தியா செய்யும் உதவி
கொழும்பு: நான்கு பக்கமும் கடல் சூழ்ந்து தீவு நாடாக இருந்தாலும் கூட இலங்கையில் தற்போது உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு உப்பு கிடைக்காத நிலை ஏற்படலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது. அதோடு அதிக விலை கொடுத்து பொதுமக்கள் உப்பை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த திடீர் உப்பு தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்? இந்தியா எப்படி உதவுகிறது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டின் அண்டை நாடாக இலங்கை உள்ளது. நான்கு பக்கமும் கடல் சூழ தீவு நாடாக இலங்கை இருக்கிறது. நம் நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே நல்ல நட்பு என்பது தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனை மட்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இருப்பினும் நம் நாடு தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியது. அப்போது கடனாகவும், மானியமாகவும் நிறைய உதவிகளை நம் நாடு செய்தது.
இப்படி எப்போதுமே இலங்கைக்கு உதவி செய்து வருகிறது நம் நாடு. இந்நிலையில் தான் தற்போது இலங்கை ஒரு பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. அதாவது இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. இதனால் உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்ட உப்புகள் அனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ளன. தற்போது இலங்கையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு உப்பின் விலை கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. 3 மடங்கு முதல் 4 மடங்கு வரை உப்பு விலை என்பது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உப்பு ரூ.145 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள்ளச்சந்தை என்று எடுத்து கொண்டால் உப்பின் விலை இன்னும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
இதுதொடர்பாக, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில், ‛‛இலங்கையை எடுத்து கொண்டால் ஆண்டுக்கு தேவையான உப்பில் 23 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. தற்போது கனமழையால் உப்பு பற்றாக்குறை நிலவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து 30,000 மெட்ரிக் டன் அயோடின் அல்லாத உப்பு இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் நிலை இன்னும் மோசமாகி உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் இலங்கைக்கு நம் நாடு மீண்டும் உதவி செய்து வருகிறது. அதன்படி இலங்கைக்கு 3,050 மெட்ரிக் டன் உப்பை அனுப்பி உள்ளது. இதில் 2,800 மெட்ரிக் டன் அரசு நிறுவனங்களில் இருந்தும், 250 மெட்ரிக் டன் உப்பு தனியார் நிறுவனங்களில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் மோதலின் இலங்கை நம் நாட்டை ஆதரித்தது. இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இலங்கை தெரிவித்தது. அதற்கு முன்பாக இலங்கை பாகிஸ்தானுடன் சேர்ந்து கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருந்தது. இது நம் நாட்டுக்கு பிரச்சனையாக மாறலாம் என்பதால் அதனை இலங்கை ரத்து செய்தது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி இலங்கை சென்றார்.
அப்போது அவரிடம் இலங்கை சார்பில், இந்தியாவுக்கு எதிராக செயல்பட தங்களின் நிலம், நீர் உள்ளிட்டவற்றை வேறு நாடுகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தது. இப்படி இருநாடுகள் இடையேயான உறவு என்பது வலுவாக இருப்பதால் தான் உப்பு பற்றாக்குறையை சமாளிக்க நம் நாடு உதவி செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications