இலங்கை: ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இன்று ஸ்டிரைக்- 3 வது வாரமாக கிளர்ச்சி!
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் 1,000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த இலங்கையும் இன்று முடங்கி உள்ளது.
இலங்கையில் பொருளாதார பேரழிவுக்கு பொறுப்பேற்று ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டும்; ராஜபக்சேக்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை வலியுறுத்தி 3-வது வாரமாக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் 2 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் இரவும் பகலுமாக நடைபெறுகின்றன. இன்னொரு பக்கம் கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கை அரசியலிலும் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வார காலத்தில் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கெடு விதித்துள்ளன. ஆனால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டாலும் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என அடம்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் 1,000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ராஜபக்சேக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்து விலகாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.












Click it and Unblock the Notifications