எல்லாம் முறைப்படிதான்.. ஜனநாயகப்படிதான்.. அமெரிக்காவிடம் அடித்துக் கூறிய சிறிசேனா!
இலங்கையில் எல்லாம் ஜனநாயக முறைப்படியே நடக்கிறது.. அமெரிக்காவிடம் உறுதியளித்த சிறிசேனா
கொழும்பு: இலங்கையில் நடக்கும் அனைத்து அரசியல் மாற்றங்களும் ஜனநாயக முறைப்படியே நடக்கிறது என்று இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அருவருப்பாக மாறி வருகிறது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்பதாக ஏற்கனேவே அமெரிக்கா கூறி இருந்தது. அந்நாட்டு ஏற்பட்டு இருக்கும் அரசியல் குழப்பங்களை கவனித்து வருகிறோம். தேவைப்படும் சமயங்களில் முக்கிய முடிவு எடுப்போம் என்றது.
இந்த நிலையில், இன்று இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஹன்னா சிங்கரை சந்தித்தார். இருவரும் நேரில் சந்தித்து 1 மணி நேரம் உரையாடினார்கள். இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து இவர்கள் பேசியுள்ளனர்.
இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது, எந்த இடத்திலும் விதிமுறைகள் மீறப்படவில்லை. இலங்கையில் ஜனநாயகம் காக்கப்பட்டு என்று சிறிசேனா, ஹன்னாவிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு அரசியல் ரீதியான எந்த உதவியும் செய்ய தயார் என்று அமெரிக்க தூதர் ஹன்னா இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.