அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு தேசமான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது.

கொதித்தெழுந்த மக்கள்
பெட்ரோல், டீசலுக்காக வாகங்கள் அணி வகுத்து நின்றதும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இலங்கையின் நிலமையை உலக நாடுகளுக்கு எடுத்து உணர்த்தியது. இப்படி கடும் நெருக்கடியில் தவித்த இலங்கை மக்கள், தங்களின் இந்த நிலைக்கு ராஜபக்சே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம் என்று அவர்களுக்கு எதிராக கொந்தளித்தனர். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக முதலில் மக்கள் வெகுண்டெழுந்தனர். பிரதமரின் அலறி மாளிகை முற்றுகையிடப்பட்டதால் தனது பதவியை மகிந்த ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே.

தப்பி ஓட்டம்
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார். இது நடைபெற்ற சில நாட்களில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராகவும் மக்கள் கொதித்தெழுந்தனர். முதலில் பதவி விலகல் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே பிடிவாதமாக இருந்து வந்தார். ஆனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனால், தப்பி ஒடிய கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சி
முன்னதாக, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த இலங்கை போராட்டக்காரர்கள், அங்கு இருந்த நீச்சல் குளங்களில் குளித்து, படுக்கை அறைகளில் படுத்து எழுந்த காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதிபர் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நுழைந்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், அதிபர் மாளிகையில் இருந்த பணம் போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிபர் மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்ட 17.85 மில்லியன் (1,78,50,000 இலங்கை மதிப்பில்) ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அறிக்கை சமர்பிக்க உத்தரவு
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பணம் அனைத்தும் நீதிமன்றம் உத்தரவுப்படி இன்று கொழும்புவில் உள்ள கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதேவேளையில், இந்த பணத்தை ஒப்படைக்க மூன்று வாரங்கள் ஆனது ஏன்? என்று நீதிபதி போலீசாரை கடிந்து கொண்டார். தேவையற்ற காலதாமதம் சந்தேகத்திற்கு வழிவகுப்பதாகவும் காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications