இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சி படுதோல்வி
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உட்பட அவரது ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை வேட்பாளர்களுமே படுதோல்வியைத் தழுவினர். அக்கட்சிக்கு ஒரே ஒரு நியமன எம்.பி கிடைத்திருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் 225 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 22 மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சை குழுக்களும் தேர்தலை எதிர்கொண்டன. மொத்தம் 7,452 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 196 எம்.பிக்கள் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் - விகிதாசார அடிப்படையில் நியமன எம்.பிக்கள் அதாவது போனஸ் எம்.பிக்கள் கிடைக்கும். இந்த நியமன எம்.பிக்களின் மொத்த எண்ணிக்கை 29.
பி.இ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆக.12ல் ஆரம்பம் - அண்ணா பல்கலை அறிவிப்பு
ராஜபக்சே கட்சிக்கு அமோக வெற்றி
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. பிற்பகலில் தபால் வாக்குகள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் அடுத்தடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியாகி உள்ளன. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர்- முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 196-க்கு 128 இடங்களில் வென்றது. இதனால் அந்த கட்சிக்கு 17 நியமன எம்.பிக்கள் கிடைத்தனர். இதனையடுத்து ராஜபக்சே கட்சிக்கு மொத்தம் 145 எம்.பிக்கள் உள்ளனர்.
ரணில் கட்சி தோல்வி- சஜித் அமோகம்
ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே உட்பட அத்தனை வேட்பாளர்களுமே படுதோல்வியைத் தழுவினர். ரணில் கட்சிக்கு ஒரே ஒரு நியமன எம்பி கிடைத்திர்ருக்கிறது. அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கிய சஜித் பிரேமதாசவுக்கு 47 இடங்கள் கிடைத்துள்ளன. நியமன எம்.பிக்களாக 7பேரையும் சஜித் அணி பெற்றிருக்கின்றன. தற்போது 54 எம்.பிக்களுடன் சஜித் பிரேமதாச கட்சி 2-வது பெரிய கட்சியாக இடம்பிடித்திருக்கிறது.
10 இடங்களுடன் ததேகூ
கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறி பல்வேறு அணிகளாகப் போட்டியிட்டது. இருப்பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- இலங்கை தமிழரசு கட்சி மொத்தம் 9 இடங்களைப் பெற்றது. வாக்கு விகித அடிப்படையில் 1 நியமன எம்பி கிடைத்துள்ளது. மொத்தம் 10 எம்.பிக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.
இதர கட்சிகள் எம்பி இடங்கள்
டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி- 2; அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 1; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி- 1; முஸ்லிம் தேசிய முன்னணி- 1 - தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 1 இடத்தை கைப்பற்றி இருக்கிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- 1; தேசிய காங்கிரஸ்- 1; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1 இடத்தைப் பெற்றது.
இலங்கையில் கூட்டணி அரசு
இலங்கையில் 3ல் 2 பங்கு எம்.பிக்களைப் பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். அதாவது மொத்தம் 150 எம்.பிக்கள் ஆதரவு தேவை. தற்போது ராஜபக்சே கட்சிக்கு 145 எம்.பிக்கள்தான் உள்ளனர். இன்னமும் 5 எம்.பிக்கள் தேவை. ஆகையால் டக்ளஸ் தேவானந்தா கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை மகிந்த ராஜபக்சே அமைக்க இருக்கிறார்.